யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னையிலுள்ள 388 'அம்மா உணவகங்களின்' செயல்பாட்டை மேம்படுத்தவும், அவை தடையின்றி இயங்குவதை உறுதி செய்யவும் மாநில அரசு ரூ. 21 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே போல் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.450 கோடிக்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டது. சில இடங்களில் முதல்வர் உணவகம் என்று பெயர் மாற்றப்பட்டது - பேசு தமிழா பேசு, யூடியூப்

விரிவான விளக்கம்
Sumathi Megavarnam Exclusive என்ற தலைப்பில் பேசு தமிழா பேசு யூடியூப் பக்கத்தில் மார்ச் 23, 2026 அன்று வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பேசிய ஒருவர், தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டது. சில இடங்களில் முதல்வர் உணவகம் என்று பெயர் மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது New Indian Express ஊடகத்தில் ”TN government allocates Rs 21 crore for smooth functioning of Amma canteens” என்ற தலைப்பில் ஜூலை 20, 2024 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் சென்னை முழுவதும் உள்ள 388 'அம்மா உணவகங்களின்' செயல்பாட்டை மேம்படுத்தவும், அவை தடையின்றி இயங்குவதை உறுதி செய்யவும் மாநில அரசு ரூ. 21 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீட்டில், சேதமடைந்த பாத்திரங்களை மாற்றுவதற்காக ரூ. 7 கோடியும், உணவகங்களைப் புதுப்பிப்பதற்காக ரூ. 14 கோடியும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிப் பார்க்கும் போது, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஜூலை 19, 2024 அன்று வெளியிட்ட பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.450 கோடிக்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுருந்தார். மேலும் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும், அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன் என்றும் தெரிவித்திருந்தார்.
நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது… pic.twitter.com/oBxHJaqJV8
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின்ப் படி, பல்வேறு இடங்களில் அம்மா உணவகத்தை மேம்படுத்த திமுக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரியவருகிறது. எனவே தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டதாக தமிழா பேசு யூடியூப் பக்கத்தில் தவறானத் தகவலை பரப்பி வருகின்றனர்.