யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கவே பெரியார் சிலை தேர்தல் காலங்களில் மறைக்கப்படுவதில்லை.
பரவிய செய்தி
ஈரோட்டில் தேர்தல் விதிகளின் காமராஜர் சிலையை மூடிய அதிகாரிகள் ஈவேரா சிலையை ஏன் மூடவில்லை !
ஈவெரா புகைப்படத்தை பயன்படுத்தி திமுக வாக்கு கேட்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா தேர்தல் ஆணையம் ?

விரிவான விளக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (பிப்.5) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்தது.
ஈரோட்டில் தேர்தல் விதிகளின் காமராஜர் சிலையை மூடிய அதிகாரிகள் ஈவேரா சிலையை ஏன் மூடவில்லை ! | @Saattaidurai @ECISVEEP @arivalayam
#naamtamilarkatchi #seemanism #evramasamy #ErodeByElection #DMKFailsTN #ErodeEastByElection pic.twitter.com/wgBHp9p0Hy
இதன் ஒரு பகுதியாக முன்னாள் அரசியல் தலைவர்களின் சிலைகள் தேர்தல் ஆணையத்தால் மூடி மறைக்கப்பட்டது. இந்நடவடிக்கையில் தந்தை பெரியாரின் சிலை மட்டும் மறைக்கப்படவில்லை என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அப்பதிவில் ‘தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மீறுகிறதா?’ என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.
உண்மை என்ன?
தேர்தலின் போது பெரியார் சிலை மறைக்கப்படாதது ஏன் என தேடியதில், இது குறித்து 2024, மார்ச் மாதம் நக்கீரன் ஊடகத்தின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியை காண முடிந்தது.
அதில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை காவல் துறையினர் மறைத்துள்ளனர். அப்போது அப்பகுதி பெரியாரிய அமைப்பினர் நீதிமன்ற தீர்ப்பினை மெற்கோள் காட்டி சிலையை மீண்டும் திறந்துள்ளனர் என்ற செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ம் ஆண்டு திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்தது. பிறகு 2019, பிப்ரவரி மாதம் நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
மேலும், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தலைவர்களின் சிலைகள் மூடப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ‘பழம்பெரும் தலைவர்களின் சிலைகள் மூடப்படுவதில்லை. அதேநேரத்தில் தற்போது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மற்றவர்கள் சிலைகள் மூடப்படுகின்றன’ என்று கூறியுள்ளார்.
இடைக்கால தடை விதிக்கப்பட்டது முதற்கொண்டே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பெரியார் சிலை மூடப்படுவதில்லை. மீறி தவறுதலாக மூடும் பட்சத்தில் அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற தீர்ப்பு இவ்வாறு இருக்கையில் பெரியார் சிலையை மட்டும் மறைக்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறையை மீறுவதாக தவறான தகவலை சாட்டை துரைமுருகன் பரப்பி வருகிறார்.
முடிவு:
நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கவே பெரியார் சிலை தேர்தல் காலங்களில் மறைக்கப்படுவதில்லை. சாட்டை துரைமுருகன் கூறுவது போல் இதில் எந்த விதிமீறலும் கிடையாது.