யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜம்மு & காஷ்மீரின் பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பரவும் வீடியோ தொடர்பான காட்சிகள், கடந்த 2011-ல் இருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.
பரவிய செய்தி
ஜம்மு & காஷ்மீரின் பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விரிவான விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த நிலையில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஏப்ரல் 08) இரவு இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி பாகிஸ்தானை சார்ந்த சமூக ஊடகப் பக்கங்களில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
📍Based on correct intelligence, Pak Army strikes Dharamshal 1 & 2 posts in Battal Sector (Opposite Rawalakot) resulting in elimination of at least 12 Indian soldiers📍Pak Army subsequently managed to raze both posts to ground through precise strikes. 📍It has promised to avenge… pic.twitter.com/Wszslp8Y3I
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2018-ல் இருந்தே பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
Sad ! pic.twitter.com/STgf1bvaRk
“India” ஊடகத்தின் இணையப் பக்கத்தில் கடந்த 2016 பிப்ரவரி 25 அன்று பரவி வரும் வீடியோவில் காணப்படும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பயங்கரவாதம் தொடர்பான வன்முறைகளால் ஏற்படும் பொதுமக்கள் இறப்பு 1990களில் இருந்து 90 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அரசு தரவுகள் தெரிவிக்கின்றன“ என்று குறிப்பிடப்பட்டு பரவி வரும் வீடியோவில் காணப்படும் காட்சி, புகைப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, “Getty Images“ இணையப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படம் கடந்த 2011-லேயே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

இதன் மூலம் ஜம்மு & காஷ்மீரின் பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது.
மேலும் இது குறித்து ஒன்றிய அரசின் “PIBFactCheck” பக்கத்திலும், பரவி வரும் வீடியோ “கடந்த 2011-ல் இருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், ஜம்மு & காஷ்மீரின் பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் கடந்த 2011-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளன என்பது உறுதியாகிறது.