யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை...
தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்...
#4000கோடி_என்னாச்சு

விரிவான விளக்கம்
ரூ.4000ம் கோடி செலவு செய்தும் மழை நீர் தேங்கி வருகிறது என்று பலரும் தி.மு.க அரசை விமர்சித்து வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை… தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்… #4000கோடி_என்னாச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் உண்மை தன்மையை குறித்து அறிய எங்கள் ஆய்வை தொடங்கினோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தபோது, JJ Sujith I.N.D.I.A என்ற எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 29, 2020 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை நீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியை நிர்வாகிகள் தங்கள் வீட்டுக்கு ஒதுக்கிக் கொண்டதால் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை...
தீர்வு உண்டு திமுக ஆட்சிக்கு வந்தால்... pic.twitter.com/0FDg9isurA
எனவே இது 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதற்கும் 2021ல் பொறுப்புக்கு வந்த தி.மு.க அரசுக்கும் தொடர்பில்லை.
இதை மேலும் இந்த வீடியோ குறித்து தொடர்ந்து தேடினோம். அப்போது RAM என்ற யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 29, 2020 அன்று இதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் திருவல்லிக்கேணியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோ 2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்டதாகும். இந்த பழைய வீடியோவை தற்போது திமுக ஆட்சியில் நடந்தது போல் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.