யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த சம்பவம் தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023ஆம் ஆண்டு நடைபெற்றதாகும். இதற்காக 5 மாணாக்கர்களை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
பரவிய செய்தி
தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி...
நேற்று செய்முறை தேர்வுகள் முடித்த +2 மாணவ மாணவியர் தங்கள்
பள்ளிக்கு நன்றி சொல்லிவிட்டு போன மாணவர்கள்

விரிவான விளக்கம்
தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 08, 2026 அன்று +2 மாணாக்கர்கள் தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளை சேதப்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் அட்டகாசம் சீரழிக்கப்பட்டது மாணவர்களின் கல்வித்தரத்தை திமுக ஆட்சி
தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி...
நேற்று செய்முறை தேர்வுகள் முடித்த +2 மாணவ மாணவியர் தங்கள் pic.twitter.com/2EYyyLLXdE
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது மார்ச் 09, 2023 அன்று ”தரும்புரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் - சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி” என்ற தலைப்பில் இதே வீடியோ குறித்து தந்தி டிவி ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்களை மாணாக்கர்கள் அடித்து நொறுக்கினர். இது குறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை 5 மாணவர்கள் 5 நாள் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தேடிய போது, News 18 Tamilnadu ஊடகத்திலும் ”வகுப்பறையில் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கிய ப்ளஸ் டூ மாணவர்கள்.. தர்மபுரி அரசு பள்ளியில் அட்டகாசம்.!” என்ற தலைப்பில் மார்ச் 09, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்பள்ளியில் ஏற்கனவே இது போன்று இரண்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் முறையான நடவடிக்கை எடுக்காததால் மூன்றாவது முறையாக சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோ தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இதை தற்போது நடந்த சம்பவம் போல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.