யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ கடந்த 2024 மே 9ஆம் தேதியன்று லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
போர் இன்னும் தொடங்கல... லாகூர் விமான நிலையத்துல போர் விமானத்தில் ஏவுகணைய பொருத்தியபோது பேட்டரி வெடிச்சி பயங்கர விபத்தாம்..! 14 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்தனர் .!

லாகூர் ஏர்போர்ட்டில் தீ...பாகிஸ்தானில் உள்ள லாகூர் இன்டர்நேசனல் ஏர்போர்ட் தீப் பிடித்து எரிகிறது..
போரை ஆரம்பிக்கும் முன்பே.. விதி விளையாட ஆரம்பித்து விட்டது.

விரிவான விளக்கம்
கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்த செய்வது, அட்டாரி- வாகா எல்லையை உடனடியாக மூடியது, விசாகளை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகள் போருக்கான அறைகூவலாகவே பார்க்கப்படும் என்றும் இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இது இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூழ வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக இருக்கும் வீடியோ காட்சியை பதிவிட்டு, ’போர் தொடக்கும் முன்பே, பாகிஸ்தான் இராணுவம் லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணையை பொருத்தியபோது பேட்டரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் 14 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியானதாகவும்’ பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகின்றனர்.
போர் இன்னும் தொடங்கல...
லாகூர் விமான நிலையத்துல
போர் விமானத்தில் ஏவுகணைய
பொருத்தியபோது பேட்டரி வெடிச்சி
பயங்கர விபத்தாம்..!
14 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்
போய் சேந்திட்டாங்களாம்..!
அந்தப்பக்கம்
பலுசிஸ்தானிலும்
ஏதோ நடக்குதாம்..! pic.twitter.com/qneIbmptQw
லாகூர் ஏர்போர்ட்டில் தீ...
பாகிஸ்தானில் உள்ள லாகூர்
இன்டர்நேசனல் ஏர்போர்ட் தீப்
பிடித்து எரிகிறது..
போரை ஆரம்பிக்கும் முன்பே..
விதி விளையாட ஆரம்பித்து விட்டது. pic.twitter.com/NZ4cPhFmpW
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், ’Tweak Pakistan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. மே 9 2024 அன்று பதிவிடப்பட்டிருந்த வீடியோவின் அடிக்குறிப்பில், ’லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’WION News’ யூட்யூப் பக்கத்தில் இது குறித்து செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 2024 மே 9 அன்று பதிவேற்றப்பட்டுள்ள இந்த செய்தி, லாகூர் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

மேலும் தேடியதில், ’money control’ செய்தித்தளத்தில் இது குறித்து செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘2024 மே 9ஆம் தேதியன்று அதிகாலை 5 மணி அளவில் லாகூர் நகரத்தில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை’ என்பதும் தெரியவருகிறது.

இதிலிருந்து, இந்த வீடியோ ஓராண்டிற்கும் முன்னால் லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. மேலும், போர் விமானத்தில் ஏவுகணைகளை பொதுவாக இராணுவத் தளத்தில் தான் மேற்கொள்வார்கள், பொதுமக்கள் பயணத்திற்கு பயன்படுத்தும் விமான நிலையத்தில் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
கடந்த 2024 மே 9ஆம் தேதியன்று லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தற்போது லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணையை பொருத்தியபோது விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது.