யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"ஆபரேஷன் சிந்தூர்" எதிரொலியால், பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டன என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை . இது பாகிஸ்தானில் கடந்த 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.
பரவிய செய்தி
விமானங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு வசதி இல்லாமல் எல்லா விமானமும் கேன்சல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டுல மக்களை சுதந்திரமாவும் நிம்மதியாக வைத்துக்கொள்வதற்கு வழி இல்லாம ஒரே குறிக்கோள் இந்தியா அழிக்கணும்னு இருக்கான். சோறு தண்ணி இல்லாம பாகிஸ்தான் மக்கள் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்காங்க. சைனாவுக்கு கழுதைகளையும் பெண்களையும் ஏற்றுமதி செய்கிறார்கள். அரேபியா போன்ற நாடுகளுக்கு பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த லட்சணத்துல இந்தியா மேல போர் காஃபிர் காஃபிர் என்று ஒரே எண்ணத்தோடு இருக்காதீங்க டா. வாழுற நாட்டுக்கு விசுவாசம் நாட்டை முன்னேற்ற வழிய பாருங்க.

விரிவான விளக்கம்
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நடவடிக்கைகள் முடியுற்றநிலையில், “ஆபரேஷன் சிந்தூர்" எதிரொலியால், பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் ரத்து எனக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், “எரிபொருள் தீர்ந்ததால் பாகிஸ்தானில் விமானங்கள் ரத்து” என்றும் குறிப்பிடப்பட்டு பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு, “NDTV” ஊடகப் பக்கத்தில், கடந்த 2023 டிசம்பர் 20 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்தில் பயணிகளை ஊழியர்கள் எதிர்கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் (PIA), மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் அங்கு 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “Indian Express” ஊடகப் பக்கத்திலும், இது குறித்து கடந்த 2023-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “இந்த வீடியோவை முதலில் @arkhamkhanofficial என்ற பயனர் 2023-ல் TikTok-இல் பதிவேற்றியுள்ளார்“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, பாகிஸ்தானில் கடந்த 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை உறுதிசெய்ய முடிகிறது. இந்நிலையில் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், 'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலியால், பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டன என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இது பாகிஸ்தானில் கடந்த 2023-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.