யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ, கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில், இது தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் குறித்து போலீஸ் ரோந்து ஜீப்பில் வந்த எஸ்.ஐ அந்த வாகனத்தை ஓட்டி வந்த மாணவரிடம் விசாரிக்கும்போதே, பேட்ரால் வாகன ஓட்டுநர் மோகன் என்பவர் ரூல் தடியால் வாகனத்தை அடித்து உடைக்கிறார்.
பயந்துப்போன மாணவர் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார். தானே நீதிபதிகளாக மாறி வாகனத்தை உடைத்து தண்டனை கொடுக்கும் போலீஸாரின் செயலை ஒருவர் செல்போனில் பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய அது வைரலாகி வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விரிவான விளக்கம்
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே உள்ள சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்ற மாணவரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். பின்பு வாகனத்தை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறி 1 நிமிடம் 5 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ஏப்ரல் 1, 2019 அன்று "கல்லூரி மாணவரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் அடித்து நொறுக்கும் காட்சிகள்" என்ற தலைப்பில் News18 Tamil Nadu ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் கம்பால் அடித்து உடைப்பது பதிவாகியிருந்தது. மேலும் கஞ்சா வாங்குவதற்கு மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்திக் சுற்றித் திரிந்ததாகவும், கண்டித்தும் கேட்காததால் வாகனத்தை உடைத்ததாகவும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் behindwoods ஊடகப்பக்கத்தில், ஏப்ரல் 1, 2019 அன்று "SHOCKING! CHENNAI POLICE DAMAGE YOUTH'S 2-WHEELER, CAUGHT ON CAMERA!" என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சென்னை போர் நினைவுச்சின்னத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரை இரண்டு போலீசார் சேதப்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், காவல்துறையினரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதே போல் New indian express, News minute போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகி இருந்ததை பார்க்கமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில், இருசக்கர வாகனத்தை தாக்கிய காவல்துறை என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இதை தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.