யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ, இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடந்த மார்ச் 7, 2026 அன்று 10 டன் குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மூலம் உறுதி செய்யமுடிகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பொறுப்பேற்ற முதல் நாளே தரமான சம்பவம் மக்கள் நல் பணி தொடர வாழ்த்துக்கள். pic.twitter.com/qUmI2fcD3v
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் Daily Kanchi என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. இதைவைத்து தேடிப் பார்த்த போது, Daily Kanchi என்ற instagram பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் மார்ச் 07, 2026 அன்று பரவி வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில், 87 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை, நீதிமன்ற உத்தரவுப்படி ஆழமான பள்ளம் தோண்டி அதில் கொட்டி காவல்துறையினர் அழித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியப் போது, Kanchipuram District Police எக்ஸ் பக்கத்தில் மார்க் 07, 2026 அன்று இது குறித்து பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் 07.03.2026ல் நீதிமன்ற ,உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 62 வழக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9869.77 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மாகரல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குருவிமலை அரசு வனப்பகுதியில் அழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.03.2026) நீதிமன்ற உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 62 வழக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9869.77 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மாகரல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குருவிமலை அரசு
வனப்பகுதியில் அழிக்கப்பட்டது. pic.twitter.com/xRCswRgS6J
அதே போல் தினமலர் ஊடகத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்களை, குருவிமலை கிராமத்தில் போலீசார் அழித்தனர் என்று மார்ச் 08, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோ, இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடந்த மார்ச் 7, 2026 அன்று 10 டன் குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாக தவறாகப் பரப்புகின்றனர்.
