யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது 2016ஆம் ஆண்டு உடுமலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் புகைப்படமாகும். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கூடம் என்று தவறாக பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
செத்தவன் சமாதி க்கு 100 கோடி செலவு செய்யும் விடியாத விடியல் அரசு பள்ளி கூடம், கட்ட நிதி இல்லை. விவசாயி களுக்கு அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்ய நிலையம் கூடாரம் கட்ட நிதி இல்லை. இந்த திராவிட மாடல் அரசு மீண்டும் தேவையா.?????????????????? சிந்தித்து வாக்களிக்கவும்.????

விரிவான விளக்கம்
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கூடம் என்றும், திமுக அரசிடம் பள்ளி கூடம் கட்ட நிதி இல்லை என்றும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது The Hindu Tamil ஊடகத்தில், “உடுமலையில் இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம்?” என்ற தலைப்பில் நவம்பர் 05, 2016 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

அதில் உடுமலை சதாசிவம் வீதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய நகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அங்கு பள்ளிக் குழந்தைகள் பயன் படுத்திய பழைய பெஞ்ச் மற்றும் டேபிள்கள் குவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. அதனால், சுவர் எலும்புக் கூடு போல காட்சி தருகிறது. இந்த பள்ளிக் கட்டிடத்தை அகற்றவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த பள்ளியின் நிலை குறித்து தேடியப் போது, இது குறித்தான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதிலிருந்து பரவி வரும் இந்த புகைப்படம் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கூடம் என்று பரவுவது 2016ஆம் ஆண்டு உடுமலையில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படமாகும். இதை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கூடம் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.