யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 செப்டம்பரில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த பழைய புகைப்படத்தை 'சிரித்த முகத்துடன் கரூர் வந்திறங்கிய முதல்வர்' என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
ஒரு வேலை இது உண்மையா இருந்தா இந்த பாவம் சும்மா விடாது டா கண்டிப்பா #DMKDestroyedTN #TVKVijay

விரிவான விளக்கம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் சிரித்த முகத்துடன் கரூர் வந்திறங்கிய முதல்வர் என்று கூறி செந்தில் பாலாஜி உடன் முதலமைச்சர் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஒரு வேலை இது உண்மையா இருந்தா இந்த பாவம் சும்மா விடாது டா கண்டிப்பா #DMKDestroyedTN #TVKVijay pic.twitter.com/5Kq6PBUyNP
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது social news என்ற ஊடகப்பக்கத்தில், ”Chennai: V Senthil Balaji meets CM M K Stalin – #Gallery” என்ற தலைப்பில் செப்டம்பர் 27,2024 அன்று பரவி புகைப்படம் பதிவாகியிருந்தது. அதில் பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, விகடன் ஊடகத்தில் ”DMK: ``என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் தலைவரே" - மு.க.ஸ்டாலின் குறித்து செந்தில் பாலாஜி ட்வீட்” என்ற தலைப்பில், செப்டம்பர் 28, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டெல்லி சென்று திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்திருந்தார் என்றும், இருவரும் மாறிமாறி ஆரத்தழுவிக் கொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், செப்டம்பர் 27, 2024 அன்று பரவி வரும் புகைப்படத்தை பதிவிட்டு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்! pic.twitter.com/wtwJCYvg0R
முடிவு:
எனவே, கடந்த 2024 செப்டம்பர் மாதம் சென்னையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதலமைச்சரை சந்தித்த போது எடுக்கப்பட்ட படத்தை, கரூரில் எடுத்ததாக திரித்துப் பரப்பி வருகின்றனர்.