யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையின் போது சென்னை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பை மாநகரில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புறநகர் இரயில்கள் (Sub Urban Trains) தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், விமானங்கள் தாமதமாகவும் வேறு வழிகளிலும் (Diverted) இயக்கப்படுவதாகவும், பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விமான நிலையத்தில், விமானங்களின் சக்கரங்கள் பாதியளவு மழைநீரில் மூழ்கியிருக்கிறது. சில நபர்கள் அதன் அருகில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பயன்படுத்தி, தற்போது பெய்து வரும் கனமழையால் மும்பை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன 'சத்தியம்', 'கலைஞர்' ஆகிய செய்தித் தொலைக்காட்சிகள். மேலும் சில தனிநபர்களும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பதிவிட்டு மும்பை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக பரப்பி வருகின்றனர்.
மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, விமான நிலையத்தின் ரன் வே முழுக்க மழைநீர் தேங்கி நிற்கிறது. pic.twitter.com/TQRXg5OsAo
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், 'Times of India'-ன் யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியில், 'மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கியதாக' குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் உள்ள விமான ஓடுதளம், விமானங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றிலும் வெள்ளநீர் தேங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், 'The New Indian Express' செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், 'மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் விமான நிலையத்தில் உள்ள ஓடு தளம் மற்றும் பிற இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் படித்திருந்த சேற்றை Civilian Firearms Teams (CFTs) அப்புறப்படுத்தினர். தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து, தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் சில தமாதமாக இயக்கப்பட்டது உண்மைதான் என்பதும், ஆனால் இந்த செய்தியை வெளியிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த வீடியோ, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையின் போது சென்னை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.
முடிவு:
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் சென்னை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவைக் கொண்டு, தற்போது மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் வெள்ளநீர் தேங்கியதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.