யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
10ஆம் வகுப்பு ‘சமூக அறிவியல்’ பாட புத்தகத்தில் அயோத்திதாச பண்டிதர் பற்றி குறிப்பு பாடமாக இருக்கிறது.
பரவிய செய்தி
’தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகங்கள் தமிழ்ச் சான்றோரான அயோத்திதாச பண்டிதர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை' - சத்யதேவி, நாம் தமிழர் கட்சி.
விரிவான விளக்கம்
சமீபத்தில் ‘புதிய தலைமுறை’ ஊடகத்திற்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சத்யதேவி என்பவர், ‘இந்த அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகள் தமிழுக்கான உழைத்த தமிழ்ச் சான்றோர்களை பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் எதுவும் கற்பிக்கவில்லை. அயோத்திதாச பண்டிதர் பற்றி பாடத்திட்டத்தில் ஏதேனும் இருக்கிறதா? இல்லை! காந்தி, திருவள்ளுவர் தாண்டி தமிழ்ச் சான்றோர்கள் பற்றி பாடத்திட்டத்தில் எதுவுமில்லை’ என்று கூறினார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டு பாடப் புத்தகத்தில் அயோத்திதாச பண்டிதர் பற்றி பாடங்கள் இருக்கிறதா என்று தேடினோம். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள 10ஆம் வகுப்பு ‘சமூக அறிவியல்’ பாடப் புத்தகத்தில் அயோத்திதாச பண்டிதர் பற்றி இருப்பதை காணமுடிந்தது.

’19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடத்தில், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள் என்ற உப தலைப்பின் கீழ் அயோத்திதாச பண்டிதர் பற்றிய குறிப்புகளையும் அவரது படத்தையும் காணமுடிகிறது. அதில். ‘அயோத்திதாச பண்டிதர் ஒரு தீவிர தமிழ் அறிஞர், சித்த மருத்துவர், பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர் என்றும் அவர் சாதிய மேலாதிக்கம், தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, 10ஆம் வகுப்பு ‘சமூக அறிவியல்’ பாட புத்தகத்தில் அயோத்திதாச பண்டிதர் பற்றி குறிப்பு இருப்பதை அறியாமல் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் தவறாக பரப்புகிறார் என்பது தெரிக்கிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் அயோத்திதாச பண்டிதர் பற்றி எதுவும் இடம்பெறவில்லை என்று தவறான தகவலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சத்யதேவி பரப்பிவருகிறார்.