யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகளிர் உரிமைத்தொகைக்கான நிதி ஆதி திராவிடர் நலத்துறை நிதியிலிருந்து மடை மாற்றப்படுகிறது என்று எந்த பத்திரிகை செய்தியிலும் கூறப்படவில்லை.
பரவிய செய்தி
”ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து 14,450 கோடி ரூபாயை மடைமாற்றம் செய்து மகளிர் உரிமைத்தொகையை வழங்குகிறது தமிழ்நாடு அரசு. இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருக்கிறது” - நாம் தமிழர் பேச்சாளர்.
விரிவான விளக்கம்
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த திமுக அரசு, குடும்ப பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி தற்போது வரை அமல்படுத்தி வருகிறது. 2026ஆம் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும், இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று கூறி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு சேர்த்தும் கோடைக்கால சிறப்புத்தொகையாக 2000 ரூபாய் சேர்த்தும் மொத்தம் 5000 ரூபாயாக வழங்கியது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், ’தந்தி டிவி’ நடத்திய மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர், ”நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் சும்மா இருந்துவிட்டு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னால் 5000 ரூபாய் கொடுக்கிறது திமுக அரசு. அப்படி அள்ளி அள்ளி கொடுக்கும் பணம் யாருடையது? பட்டியலின மக்களுடைய பணம் அது. 14,450 கோடி ரூபாயை ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து மடைமாற்றம் செய்து மகளிர் உரிமைத்தொகையை வழங்குகிறது தமிழ்நாடு அரசு. இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருக்கிறது” என்று பேசினார்.
உண்மை என்ன?
இந்த 5000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதிலிருந்து, ‘இதற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையின் நிதி மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டது.
இது குறித்து, ‘Special Component Plan (SCP)’ என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை தான் சிலர் ஆதி திராவிடர் நலத்துறையின் நிதி என்று தவறாக பரப்புகிறார்கள் என்று ’You Turn’ தளத்தில் ஏற்கனவே விளக்கி எழுதியுள்ளோம். ‘Special Component Plan (SCP)’ என்பது ”ஒரு மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்படும் எல்லா வகையான பொதுத்திட்டங்களின் பயன்களும் பட்டியலின மக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு சென்று சேரும் வகையில் ஒதுக்கப்படவேண்டிய நிதி” ஆகும். இது எந்த வகையிலும் ஆதி திராவிடர் நலத்துறையை சேர்ந்த நிதி அல்ல.

மேலும், ஆதி திராவிடர் நலத்துறையின் நிதி மகளிர் உரிமைத்தொகைகாக மடைமாற்றப்பட்டிருப்பதாக ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா? என்று தேடினோம். தினமலர் செய்தித்தளத்தில் இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்திகளைக் காணமுடிகிறது.
முதலில் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகியுள்ள செய்தியில், ’பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்ட நிதியாக மத்திய அரசு வழங்கியதை திமுக அரசு மகளிர் உரிமைத்தொகைக்காக செலவு செய்ததாக கூறி தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகியுள்ள செய்தியில், ‘மகளிர் உதவித்தொகையாக 5000 ரூபாய் வழங்க பட்டியல் சமூக மக்களுக்கு செலவிட வேண்டிய நிதியை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி உள்ளார்’ என்று சமூக சமத்துவப்படை நிறுவனத்தின் தலைவர் சிவகாமி குற்றம் சாட்டியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் எதிலும், மகளிர் உரிமைத்தொகைக்கான நிதி ஆதி திராவிடர் நலத்துறை நிதியிலிருந்து மடை மாற்றப்படுகிறது என்று கூறப்படவில்லை. ‘இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது’ என்றும் ‘ இவ்வாறு ஆதி திராவிடர் நலத்துறையின் நிதி தவறாக கையாளப்படுகிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையரகத்தில் புகார் செய்துள்ளார்கள்’ என்றும் குறிப்பிட்டு தான் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு:
ஆதி திராவிடர் நலத்துறை நிதியை மகளிர் உரிமைத்தொகைக்காக திமுக அரசு பயன்படுத்தியதாக சில இயக்கத்தினர் புகார் கொடுத்துள்ளார்கள் என்று வெளியான செய்திகளை திரித்து, மகளிர் உரிமைத்தொகைக்காக ஆதி திராவிடர் நிதி மடைமாற்றுள்ளதாக செய்தி ஆதாரங்கள் இருப்பதாக நாம் தமிழர் பேச்சாளர் பொய்யான செய்தியை பரப்புகிறார்.