யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக மொத்தமுள்ள 22 திமுக MP-களும் வாக்களித்தனர். மற்றவர்கள் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியன்று 'வக்ஃப் திருத்த மசோதா -2025' நாடாளுமன்றத்தில் பாஜகவால் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 288 MP-களும் எதிராக 232 MP-களும் வாக்களித்தனர். இதனால், ஏப்ரல் 4ஆம் தேதி அதிகாலையில் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஹெலோ உடன்பிறப்பே..... pic.twitter.com/uRG6u6ka3G
வக்ஃப் திருத்த மசோதா பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தகொண்டிருந்த போது அந்த மசோதாவை எதிர்த்து 22 திமுக MP-கள் வாக்களித்திருப்பதாக ’Republic’ செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாக ஒரு screenshot இணையத்தில் பரப்பப்படுகிறது.
இதனைக்கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து 39 நாடாளுமன்று உறுப்பினர்கள் மக்களையில் உள்ளனர். ஆனால் மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டு MP-கள் 22 பேர் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். மற்ற MP-களின் வாக்குகள் என்னவானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக ஆதரவாளர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் பரப்பிவருகின்றனர்.
உண்மை என்ன?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 39 MP-கள் உள்ளனர். அதில் 22 MP-கள் மட்டுமே திமுகவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர். மற்ற கட்சியைச் சேர்ந்த MP-கள் வாக்களித்தது பற்றி அந்தந்த கட்சியின் பெயரில் விவரங்கள் வெளியிடப்படும்.
’காங்கிரஸ்’ ஒரு தேசிய கட்சி என்பதால், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் MP-கள் 9 பேரும் அளித்த வாக்குகள் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ கட்சியின் மொத்த வாக்குகள் கணக்கில் தான் வரும்.

பரவி வரும் screenshot-ல் 99 காங்கிரஸ் MP-கள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவையின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 99 காங்கிரஸ் MP-கள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 MP-களும் அடக்கம்.

மேற்கூறிய விவரங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த MP-கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் MP-கள் உட்பட அனைவரும் வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்பது தெரிகிறது.
மேலும், சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 MP-கள் மட்டுமே வாக்களித்ததாக கூறியதோடு, பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்காமல் சென்றதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் ஆதரவாக வாக்களித்தாகவும்’ குறிப்பிடுகிறார்.
39 MP-கள் அதில் திமுக உறுப்பினர் 22 நபர்கள் இருப்பது மக்களைவையில் (Lok Sabha) தான். அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் இருப்பது மாநிலங்களவையில் (Rajya Sabha). இது இரண்டும் ஒன்றென குழப்பிப் பேசுகிறார் சீமான்.
முடிவு:
வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக மொத்தமுள்ள 22 திமுக MP-களும் வாக்களித்தனர். மற்றவர்கள் திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள். இதனைத் திரித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 MP-களில் 22 MP-கள் மட்டுமே வாக்களித்தாக தவறாக பரப்புகிறார்கள்.
