யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 133 தொகுதிகளிலும், அதிமுக 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, விசிக, பாஜக, நாதக போன்ற கட்சிகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தவெக கட்சியும் போட்டியிடவுள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய வாக்காளர் பேரவை நடத்திய கருத்துக் கணிப்பின் படி, வரும் தேர்தலில் அ.தி.மு.க விற்கு 173 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த காய்திரி ரகுராம் செய்தித்தாள் ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய பகுதி என ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் 4 பேர் வீதம் மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் ஒரு லட்சம் மக்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்ணா திமுக ஆட்சி அமைக்கும் 🔥🔥🔥 அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 💪🏼 pic.twitter.com/ESTnVxDbkT
உண்மை என்ன?
பரவி வரும் செய்தித்தாள் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடி பார்த்தோம். அப்போது Madhan Prabu Kongu என்பவரின் முகநூல் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அப்போது அவர் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி இந்த செய்தித்தாளை பதிவிட்டுயிருந்தார். அதில் ”நமது வெற்றி நாயகன் வி.பி. கந்தசாமி - சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் இரட்டை இலை” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே பரப்பப்படும் இந்த நியூஸ் கட்டிங் தற்போதைய புதிய செய்தி அல்ல என்பது உறுதியாகிறது.
மேலும் அந்த செய்தித்தாளில் குறிப்பிட்டுள்ள இந்திய வாக்காளர் பேரவை என்பது குறித்து தேடி பார்த்தபோதும், அந்த அமைப்பு குறித்த எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. அதே போல் Keywords மூலம் தேடி பார்த்த போதும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே 4 ஆண்டுகளாக இணையத்தில் பரவிக் கொண்டிருக்கும் ஒரு படத்தைத் தான் புதிய செய்தி போல காயத்ரி ரகுராம் பதிவிட்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 133 தொகுதிகளிலும், அதிமுக 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முடிவு
இறுதியாக நம் தேடலில், இந்த செய்தித்தாளின் பக்கம் 2021ஆம் ஆண்டு முதலே பரப்பப்பட்டு வருவது உறுதிசெய்யப்பட்டது.
