யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் முடிவில், கைது செய்யப்பட்டவர்கள் “சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்தி என்ற காளீஸ்வரன், தவசி என்ற குணா“.
பரவிய செய்தி
கோவை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில், ஷிக், அப்துல் காதர், மற்றும் அஜய் ஆகியோர் பதுங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டது.

விரிவான விளக்கம்
நவம்பர் 2ம் தேதி மாலை தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவை விமான நிலையம் அருகே உள்ள இடத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியும் படுகாயமடைந்த அவரது நண்பரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் 3 பேரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகள் பெயர் ஷிக், அப்துல் காதர் மற்றும் அஜய் Zee Tamil ஊடகத்தின் இணையதளப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு நபர்கள் இஸ்லாமியர்கள் என்று பரவும் இந்த செய்தியின் உண்மை தன்மையை குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது PTI ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக கோவை நகர காவல் ஆணையர் சரவண சுந்தர் அளித்த பேட்டி செய்தியாக வெளியாகியிருந்தது. அதில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணறு பகுதியில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததாகவும், பின்னர் அங்கு சென்ற போது காவல்துறையினர்கள் அவர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்க முயன்றதாகவும், இதையடுத்து தற்காப்புகாக காவல்துறையினர் அவர்களது காலில் சுட்டுப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்தி என்ற காளி ஈஸ்வரன், மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த தவசி என்ற குணா ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாகவும் காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
VIDEO | Coimbatore: Three accused in gang rape case shot in the legs during police action earlier today; arrested and shifted to government hospital.
Coimbatore City Police Commissioner Saravana Sundar says, “Regarding the sexual assault case that took place near Coimbatore… pic.twitter.com/xr5m25veLh
இது குறித்து மேலும் தேடிய போது, இந்து தமிழ் ஊடகப்பக்கத்தில் “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை” என்ற தலைப்பில் செய்தி வெளியாகிருந்தது. அதிலும் கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் முடிவில், கைது செய்யப்பட்டவர்கள் “சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்தி என்ற காளீஸ்வரன், தவசி என்ற குணா“ என்பதாகும். இந்நிலையில் குற்றவாளிகளான ஷிக், அப்துல் காதர், மற்றும் அஜய் ஆகியோர் பிடிபட்டனர் என்று தவறான நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு “Zee நியூஸ் தமிழ்” ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.