யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நீர்நிலைகளில் கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலமாக அனுமதி கொடுக்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான்.
பரவிய செய்தி
விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுக்க அனுமதி. தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி. வண்டல் மண் எடுக்க http://tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
#AlluvialSoil #soil #permission #thanthitv


விரிவான விளக்கம்
ஏரி, குளம், ஆணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து காரணமாக வண்டல் மண் தேங்கியிருக்கும். இதனை விவசாய பயன்பாட்டிற்காகவும், மண்பாண்டங்கள் தயாரிக்க பயன்படுத்துவதும் வழக்கம்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் வண்டல் மண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும்; அதற்காக http://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வண்டல்மண் எடுக்க அனுமதி
விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுக்க அனுமதி
தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி. வண்டல் மண் எடுக்க https://t.co/1tTNvm9mpO இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர்… pic.twitter.com/ebwmJH3mAZ
உண்மை என்ன?
முந்தைய ஆட்சிகளில், நீர்நிலைகளில் விவசாய பயன்பாடிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது குறித்த செய்திகளைத் தேடினோம். 2017ஆம் ஆண்டு ’தினமணி’ வெளியிட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அச்செய்தியில், அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, மேட்டூர் அணையில் வண்டல் மண் அள்ளுவது தொடர்பாக விவகாரத்தில், விவசாயிகள் வண்டல் மண் அள்ள ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, வட்டாட்சியர் மூலம் அனுமதி வழங்கப்படும் என்ற நடைமுறையை கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த திமுக ஆட்சியில் 2024 ஜூலை மாதம் ’ETV Bharat’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, இயற்கை வளங்கள் துறை, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை எண் 14-ல் கடந்த 2024 ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டு, tnesevai.tn.gov.in மூலம் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதன் மூலமாக ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலமாக அனுமதி கொடுக்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான் என்பது தெரிய வருகிறது.
முடிவு:
நீர்நிலைகளில் கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலமாக அனுமதி கொடுக்கப்படும் திட்டம் தவெக ஆட்சியில் புதிதாக தொடங்கப்பட்டது என்கிற தொனியில் திரிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளன செய்தி ஊடகங்கள்.