யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், ஐயோடின் கலந்த உப்பு, மசாலாப் ஆகியவை மாநில அரசுகளால் தனியாரிடம் ஒப்பந்தம் மூலமாக தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
பரவிய செய்தி
’ரேஷன் கடைகளுக்கான எல்லா பொருட்களையும் மாநில அரசுக்கு மத்திய அரசு தான் இலவசமாக கொடுக்கிறது. இப்படி மத்திய அரசு கொடுப்பதை தான் மாநில அரசு தங்களது ஸ்டிக்கரை ஒட்டி, தாங்களே மக்களுக்கு கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறது’ - நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக தலைவர்.
விரிவான விளக்கம்
பேரையூரைச் சேர்ந்த திமுக கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளர் ஆர்.கே. ராஜா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் தமிழ்நாடு பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன். அப்போது அவர் கூறுகையில், ‘ரேஷன் கடைகளுக்கான எல்லா பொருட்களையும் மாநில அரசுக்கு மத்திய அரசு தான் இலவசமாக கொடுக்கிறது. இப்படி மத்திய அரசு கொடுப்பதை தான் மாநில அரசு தங்களது ஸ்டிக்கரை ஒட்டி, தாங்களே மக்களுக்கு கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறது’ என்று பேசினார்.
உண்மை என்ன?
இது குறித்து தேடுகையில் தமிழ்நாடு ’உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை’யின் கொள்கை விளக்கக் குறிப்பை காணமுடிகிறது. அதில் ‘உச்ச நீதிமன்றம் 2001-ஆம் ஆண்டில், ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு பெறும் உரிமை குறித்து உத்தரவு பிறப்பித்தன் தொடர்ச்சியாக, 2013ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்துப்பட்டது. அதற்கு முன்பாகவே கடந்த 50 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), முன்னுரிமை குடும்ப அட்டைகள் அந்தியோதயா அன்னயோஜனா (PHHAAY), முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள்(NPHH) என்று ஐந்து வகையான குடும்ப அட்டைகள் உள்ளன.
இந்நிலையில், 2023 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மாதாந்திர ஒதுக்கீட்டு அளவில் இந்திய அரசு முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருவதாக இந்த கொள்கை விளக்க குறிப்பில் காணமுடிகிறது.

ஆனால், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH அட்டைதாரர்கள்) வழங்குவதற்காக ஒரு மாதத்திற்கு 1 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான மொத்த செலவும் மாநில அரசால் முழுமையாக ஏற்கப்படுகிறது.

மேலும், இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுத்துள்ள குறிப்பின் படி, கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களை தான் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கிறது. ஆனால் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், ஐயோடின் கலந்த உப்பு, மசாலா ஆகிய பொருட்கள் மாநில அரசுகளால் கொடுக்கப்படும் கூடுதல் பொருட்கள் என்றே தெரியவருகிறது. இதனை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்குவதில்லை.

பாமாயில், துவரம்பருப்பு ஆகிய தமிழ்நாடு அரசால் தனியாரிடம் ஒப்பந்தம் மூலமாக தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள், சக்கரை ஆகியவை ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதும் ஆனால் மாநிலங்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் கொடுக்கும் அனைத்து பொருட்களும் ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டவை அல்ல என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களையும் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு இலவசமாக கொடுப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவறான தகவலை பரப்பி வருகிறது.