யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களின் கைகளில் உள்ள பதாகைகளிலும், ”200 வருட பாரம்பரிய கோவிலை சிதைக்காதே”, ”புராதன சின்னத்தை அழிக்காதே”, “சிலை திருட்டு குற்றவாளிகளுக்கு அரசு நிர்வாகமே துணை போகாதே”, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்து” என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் விநாயகர் கோவிலை புனரமைப்பு செய்யக் கூடாது என்றும், கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தினமலர் ஊடகத்தில் வெளியான செய்தியை பதிவிட்டு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
உண்மை என்ன?
முதலில் இந்த போராட்டம் குறித்து தேடிய போது அப்போராட்டத்தின் சில முக்கியமான வீடியோக்கள் கிடைத்தன. இதையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடன் Youturn தரப்பில் பேசினோம். அப்போது அவர்களும் சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் அனுப்பி வைத்தனர். அந்த வீடியோக்களில் போராட்டத்தில் பேசக் கூடிய போராட்டக்காரர்கள், பழமையான இந்த கோவிலை இடிக்கக் கூடாது, இடிக்காமல் புனரமைப்பு செய்ய வேண்டும் என்றே கேட்கிறார்கள்.
இதையடுத்து அந்த புகைப்படங்களில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களின் கைகளில் உள்ள பதாகைகளை பார்க்கமுடிந்தது. அதில் "200 வருட பாரம்பரிய கோவிலை சிதைக்காதே”, ”புராதன சின்னத்தை அழிக்காதே”, “சிலை திருட்டு குற்றவாளிகளுக்கு அரசு நிர்வாகமே துணை போகாதே”, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்து” என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.


அந்த வீடியோவில் போராட்டக்காரர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது பழமையான கோவில், எங்க முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு நாங்கள் வழிபட்ட கோவில்…இந்த கோவிலை கட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. நீதிமன்ற உத்தரவு இந்த கோவிலை பழமை மாறாமல் அப்படியே புனரமைக்க வேண்டும் என்றே கூறியுள்ளது. ஏற்கனவே அறநிலையத்துறையின் நிபுணர் குழு தந்த அறிக்கையைத் தான் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி இந்த கோவிலை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் எனும்போது தான் பிரச்சினை வருகிறது. கோவில் கட்டக் கூடாது என்று இஸ்லாமியர்கள் யாரும் சொல்லவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
அதே போல் இதுகுறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளிலும், “பழமையான கோவிலை இடிக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு”, ”கோவிலை பழமை மாறாமல் புனரமைக்கக் கோரி முஸ்லிம்கள் தர்ணா” என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.


முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, கோவிலை பழமை மாறாமல் அப்படியே புனரமைக்க வேண்டும் என்பது தான் இஸ்லாமியர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை நீதிமன்ற உத்தரவை மீறி கோவிலை புனரமைக்கக் கூடாது என்று முஸ்லீம்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்துடன் அர்ஜூன் சம்பத் போன்ற இந்துத்துவ அமைப்பினர் தவறாகப் பரப்புகின்றனர்.
