யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படத்திற்கும், உதய்பூரில் பிரெஞ்ச் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருவேறு சம்பவங்களை தொடர்புபடுத்தி பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
உதய்பூரில் பிரெஞ்ச் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வங்கதேசத்தை சேர்ந்த சட்ட விரோத குடியேறியான முபாசிர் காண், உ.பி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரிவான விளக்கம்
ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலமான உதய்பூரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர் ஒருவர், நகரில் சிறப்பு வாய்ந்த இடங்களை சுற்றிக் காட்டுவதாகக் கூறி, பிரெஞ்சு சுற்றுலாப் பயணி ஒருவரை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில், உதய்பூரில் பிரெஞ்ச் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், வங்கதேசத்தை சேர்ந்த சட்ட விரோத குடியேறியான முபாசிர் கான் தான் காரணம் என்பதை கண்டறிந்து, அவரை உ.பி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
That's true, she was raped by a 🐷 Mubassir Khan🤲, an illegal B🅰️ngladeshi Muslim arrested by the UP Police. pic.twitter.com/YqjyXwNVhe
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்திற்கும், உதய்பூரில் பிரெஞ்ச் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது.
பரவி வரும் புகைப்படம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள இஸ்ஸாம் நகரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த “முஸ்பீர்“ என்பவரை காவல்துறையினர் என்கவுண்டரில் கைது செய்தபோது எடுக்கப்பட்டது என்பதை “Crime Junction” வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவரா என்பது குறித்து தேடியதில், அது குறித்த எந்த செய்திகளும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும், ராஜஸ்தானின் உதய்பூரில் பிரெஞ்ச் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் பெயர் “புஷ்பராஜ் ஓஜா எனப்படும் சித்தார்த்“ என்பதை “Hindustan Times” வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
இந்நிலையில் இருவேறு சம்பவங்களை தொடர்புபடுத்தி பலரும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் புகைப்படத்திற்கும், உதய்பூரில் பிரெஞ்ச் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது.