யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடப்படும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுக் கொண்டத்திலிருந்து பல புதிய திட்டங்கள், நடைமுறைகள் அறிவிக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதில், பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் தான் என்று நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறோம்.
இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்து அமைச்சர்களின் மொபைல் எண்களும் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இனி பொதுமக்கள் அமைச்சர்களிடமே நேரடியாக புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அந்த புகார்களை அந்தந்த அமைச்சகத்தின் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கையாள்வார்கள் என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
அமைச்சர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். தமிழ்நாடு சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், 17ஆவது சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

முதல்வர் விஜய்-ன் அலைபேசி எண் மட்டும் வெளியிடப்படவில்லை. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 6 தொகுதிகள் காலியாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தேடியபோது, திமுக ஆட்சியில் இருந்தபோது 16ஆவது சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரின் அலைபேசி எண்களும் வெளியிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. இதிலும், T.K. அமுல் கந்தசாமி, K. பொன்னுசாமி ஆகியோர் இறந்து போன காரணத்தாலும், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் ராஜினாமா செய்ததாலும் அவர்களது விவரங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடப்படும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது.
முடிவு:
அமைச்சர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்தே பின்பற்றப்பட்டு வருவதை மறைத்து, தற்போது தவெக அரசு தான் இந்த நடைமுறையை புதிதாக கொண்டு வந்ததாக தவறாக பரப்பப்படுகிறது.
