யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
பரவிய செய்தி
இதற்கு முன்பு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றும், தவெக தான் முதல் முறையாக வெளியிடப்போகிறது - அமைச்சர் கீர்த்தனா

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மே 10ஆம் தேதி பதிவேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர், தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. 10 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன இருக்கு, எது இல்லை என்பதை உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஊடகத்திற்கு பேட்டியளித்த அமைச்சர் கீர்த்தனா, இதற்கு முன்பு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றும், தவெக தான் முதல் முறையாக வெளியிடப்போகிறது என்றும் பேசியிருந்தார்.
இதற்கு முன்பு தமிழகத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை தேடிப் பார்தோம். அப்போது இந்து தமிழ் ஊடகத்தில், ஆகஸ்ட் 19, 2021 அன்று “தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.

அதில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "என் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும் பலர் இதற்கு உறுதுணையாக இருந்தனர். முதல்வர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது. முதல்வர், அவருடைய செயலாளர்கள், முதன்மைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் பல திருத்தங்களைச் செய்தனர். இந்த அறிக்கை தயாரிப்பின்போது, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்தோம். 2001-ல் அப்போதைய நிதி அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த அறிக்கைகளையும் ஆய்வு செய்தோம்" எனத் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது, அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதை மறைத்து அமைச்சர் கீர்த்தனா தவறான தகவலை பரப்பி வருகிறார்.