யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அருகில், புலி ஒன்று மாட்டை இழுத்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதனை ரன்வீர் சிங் கௌதம் எனும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பரவிய செய்தி
Claim 1 : கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று மானை வேட்டையாடி சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ வைரல் - வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டும் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை

Claim 2 : கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து புலி மானை வேட்டையாடி சாலையில் இழுத்து சென்ற வீடியோ வைரல் - வனவிலங்குகளின் நடமாட்டும் அதிகமாக உள்ளதால் வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை

விரிவான விளக்கம்
கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று மானை வேட்டையாடி சாலையில் இழுத்துச் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி புதியதலைமுறை, Etamil News போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் அந்த செய்திகளில் உள்ள வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Ranveer Singh Gautam என்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் அக்டோபர் 4 அன்று “Collarwala male infront of our resort dragging cattle” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவை பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம். அந்த பக்கத்தின் Bioவில் மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா பகுதியை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் the safari stay என்ற அவரது இணையதளப் பக்கத்தின் லிங் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

அந்த பக்கத்தை சென்று பார்த்த போது, அதில் தொடர்புக்கொள்ள வேண்டிய எண்ணும், மின்னஞ்சலும் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து YOUTURN தரப்பில் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பரவி வரும் வீடியோ குறித்து கேட்டு குறுஞ்செய்தி அனுப்பிருந்தோம். அப்போது அதற்கு பதிலளிக்கும் விதிமாக, இந்த வீடியோவை Ranveer Singh Gautam எடுத்ததாகவும், மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அருகில், புலி ஒன்று மாட்டை இழுத்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதே போல் அவரது பேஸ்புக் பக்கத்திலும் அக்டோபர் 4 அன்று பரவி வரும் வீடியோவை ”Collarwala male tiger dragging cattle” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
முடிவு:
எனவே, பரவி வரும் வீடியோ மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அருகில், புலி ஒன்று மாட்டை இழுத்து சென்ற போது எடுக்கப்பட்டதாகும். இதனை கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் நடந்தது போல் கூறி புதியதலைமுறை ஊடகம் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.