யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மையான வீடியோவில், காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, நீதிக்கட்சி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது என்றே அவர் வீடியோவில் அவர் பேசியுள்ளார். உண்மையான வீடியோவை எடிட் செய்து தவறாகப் பரப்பியுள்ளனர். மேலும் இது குறித்து ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் வழங்குவதற்கு நீதி கட்சி முன்னோடியாக இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
பரவிய செய்தி
மனஅழுத்தம் இருந்தா அப்பப்ப.. இந்த மாதிரி காணொளிகள் பார்க்கவும்.... #திராவிட_உருட்டுகளின் சிற்சில காணொளிகள்

விரிவான விளக்கம்
காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, திமுக கொண்டு வந்ததாக திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளரான மதிவதினி கூறியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
மனஅழுத்தம் இருந்தா அப்பப்ப.. இந்த மாதிரி காணொளிகள் பார்க்கவும்.... #திராவிட_உருட்டுகளின் சிற்சில காணொளிகள் 🤣🤣🤣 pic.twitter.com/9goJtiLA6F
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவின், முழு வீடியோ கிடைக்கிறதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது Neerthirai என்ற ஊடகப்பக்கத்தில், ”பிள்ளை பிடிக்கிற கூட்டம்...Advocate Madhivadhani latest speech | Seeman | Annamalai | MK Stalin” என்ற தலைப்பில் இது குறித்தான முழு வீடியோ வெளியாகியிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் பேசியது இருக்கிறதா என்பதை தேடினோம். சரியாக 27:17வது நிமிடத்தில், ”காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது திராவிடர் இயக்கத்தின் முன்னோடி ஆட்சியாக இருந்த நீதிகட்சி” என்று பேசியிருந்தார். இதை தான் எடிட் செய்து, மதிய உணவு திட்டத்தை திமுக கொண்டு வந்ததாக மதிவதினி கூறியதாக பரப்புவது தெரியவந்தது.
இதையடுத்து மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறித்து தேடினோம். The Hindu ஊடகத்தில் ”How Tamil Nadu created history through mid-day meal scheme” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 30, 2023 அன்று ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் தி இந்து ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, நவம்பர் 16, 1920 அன்று, சென்னை ஆயிரம் விளக்குகளில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பி.தியாகராய செட்டி, மாணவர்கள் ஏழையாக இருப்பது நிறுவனத்தின் வலிமையைப் பெரிதும் பாதிக்கிறது என்பதை வலியுறுத்தியதாகவும், நான்கு மாநாகராட்சிப் பள்ளிகள் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, மாணவர் எண்ணிக்கை 1922-23ஆம் ஆண்டில் 811ஆக இருந்ததாகவும், 1924-25ல் 1,671ஆக உயர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் BBC Tamil ஊடகப்பக்கத்தில், ”தமிழ்நாடு அரசின் 'காலை உணவுத் திட்டம்' - 5 கேள்விகளும் பதில்களும்” என்ற தலைப்பில் ஆகஸ்ட்25, 2023 அன்று கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் 1920ஆம் ஆண்டு நவம்பர் 17ல் சென்னை மாநகராட்சியில் நீதிக் கட்சியின் தலைவராக சர்.பிட்டி.தியாகராயர் இருந்தபோது ஒரு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன்படி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க முடிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரு மாணவருக்கு ஒரு அணாவரை செலவழிக்கலாம் என முடுவெடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஆரம்ப கல்விக்கான நிதியிலிருந்து இந்தத் திட்டத்திற்கு செலவு செய்வதை பிரிட்டிஸ் அரசு ஏற்காததால், 1925 ஆண்டுடன் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் கூறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு சில பள்ளிகளில் மட்டும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், 1956ல் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் சில பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டதால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்ந்து அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, நீதிக்கட்சி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது என்றே அவர் வீடியோவில் அவர் பேசியுள்ளார். இதை எடிட் செய்து திமுக கொண்டு வந்ததாக மதிவதினி கூறியதாக தவறாகப் பரப்புவது தெரியவந்தது. மேலும் தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் வழங்குவதற்கு நீதி கட்சி முன்னோடியாக இருந்துள்ளது என்பதையும் அறிய முடிந்தது.