யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மார்கரெட் சாங்கர் அம்பேத்கரை நேரில் சந்தித்ததாகவும், அப்போது காந்தியின் கருத்தடை குறித்த அபிப்பிராயத்திற்காக அம்பேத்கர் ‘காந்தி ஒரு முட்டாள்’ என்று சொன்னதாகவும் எந்தவொரு குறிப்பும் இல்லை. இது பொய்யான தகவல்.
பரவிய செய்தி
மார்கரெட் சாங்கர், மேரி ஸ்டோப்ஸ் ஆகிய இரண்டு அமெரிக்க செயல்பாட்டாளர்கள் பெண்களுக்கான கருத்தடை பற்றிய பிரச்சாரத்திற்காக 1920களில் இந்தியா வந்தனர். அவர்கள் காந்தியை சந்தித்தனர். காந்தி இந்த கருத்தை ஆதரிக்கவில்லை. பின்னர் நேருவிடம் சென்றனர். நேரு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அம்பேத்கரிடம் இதுபற்றி பேசினர். மேலும் காந்தி கருத்தடை பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றி அவர்கள் அம்பேத்கரிடம் கூறியபோது, 'காந்தி ஒரு முட்டாள்' என்று அம்பேத்கர் சொன்னார். - ஷாலின் மரியா லாரன்ஸ்
விரிவான விளக்கம்
சமீபத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றிய ஷாலின் மரியா லாரன்ஸ் என்பவர், "மார்கரெட் சாங்கர், மேரி ஸ்டோப்ஸ் ஆகிய இரண்டு அமெரிக்க செயல்பாட்டாளர்கள் பெண்களுக்கான கருத்தடை பற்றிய பிரச்சாரத்திற்காக 1920களில் இந்தியா வந்தனர். அவர்கள் காந்தியை சந்தித்தனர். காந்தி இந்த கருத்தை ஆதரிக்கவில்லை. பின்னர் நேருவிடம் சென்றனர். நேரு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அம்பேத்கரிடம் இதுபற்றி பேசினர். மேலும் காந்தி கருத்தடை பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றி அவர்கள் அம்பேத்கரிடம் கூறியபோது, 'காந்தி ஒரு முட்டாள்' என்று அம்பேத்கர் சொன்னதாக" பேசினார். இந்த பேச்சு 'எக்ஸ்' தளத்தில் தற்போது பரவி வருகிறது.
Babasaheb Ambedkar "The Architect of Modern feminism in India"
#AmbedkarJayanti2025 pic.twitter.com/jYMHp84GOu
உண்மை என்ன?
CLAIM 1: மார்கரெட் சாங்கர், மேரி ஸ்டோப்ஸ் என்னும் இரண்டு அமெரிக்க செயல்பாட்டாளர்கள்!
உண்மை:
மேரி ஸ்டோப்ஸ் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்க் நகரத்தில் பிறந்தவர். அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் இங்கிலாந்தின் லண்டன் நகரத்தை மையப்படுத்தியதாக இருந்தது. அதனால் அவரை அமெரிக்க செயல்பாட்டாளர் என்று சொல்வது தவறானதாகும்.
CLAIM 2: மார்கரெட் சாங்கர், மேரி ஸ்டோப்ஸ் ஆகிய இருவரும் 1920களில் இந்தியாவிற்கு வந்தனர்.
உண்மை:
மார்கரெட் சாங்கர் 1935-1936 ஆகிய ஆண்டுகளில் 9 வாரங்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் 1936ஆம் ஆண்டு நேருவை லண்டனில் சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மார்கரெட் சாங்கர் 1952ஆம் ஆண்டு International Planned Parenthood Federation (IPPF) தொடக்கத்திற்காக பம்பாய் வந்ததாகவும், 1959ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த IPPF மாநாட்டிற்கு வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் மேரி ஸ்டோப்ஸ் இந்தியா வருகை தந்தது பற்றி இணையத்தில் தேடியதில் அவர் இந்தியா வந்ததற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இது பற்றிய 'Youturn' பதிவிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போது ஷாலின் மரியா லாரன்ஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை ஆதாரமாக கொடுத்திருந்தார். அதில் மேரி ஸ்டோப்ஸ் இந்தியாவிற்கு வந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சரியாக எந்த ஆண்டு, எந்த நாள், எந்த நகரத்தில் எந்த நிகழ்வில் கலந்துகொள்ள அவர் இந்தியா வந்தார் என்ற எந்த விவரமும் தரப்படவில்லை.
CLAIM 3: மார்கரெட் சாங்கர் அம்பேத்கரை நேரில் சந்தித்து கருத்தடை நடவடிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கருத்தடை பற்றி அபிப்பிராயத்திற்காக 'காந்தி ஒரு முட்டாள்' என்றார் அம்பேத்கர்.
உண்மை:
மார்கரெட் சாங்கர் 1935 டிசம்பர் 3 அன்று காந்தியை சந்தித்ததாகவும், பெண்கள் கருத்தடை பற்றி உரையாடியது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மார்கரெட் சாங்கர் அம்பேத்கரை சந்தித்து உரையாடியதாக எந்த குறிப்பும் இல்லை.
டாக்டர்.அம்பேத்கர் கருத்தடை மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். பம்பாய் மாகாண சட்டசபையில் 1938ஆம் ஆண்டு மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றி அம்பேத்கர் பேசியுள்ளார். 1938 நவம்பர் 10 அன்று அம்பேத்கர் பம்பாய் சட்டசபைக்கு வர முடியாத காரணத்தால், அம்பேத்கர் எழுதிய உரையிருந்து குறிப்பெடுத்து பி.ஜே. 'தாதாசாகேப்' ரோஹம் பேசியதாக குறிப்பிடப்படுகிறது.
அம்பேத்கர் சாங்கரை சந்தித்ததாக சொல்லி 'The Margaret Sanger Papers Microfilm Edition: Smith College Collection Series' என்ற புத்தகத்தை சான்றாக கொடுக்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ்
இந்த புத்தகத்தின் 'Index' பகுதியில் ஒரே ஒரு முறை அம்பேத்கரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாக காட்டுகிறார். இதனை வைத்துக் கொண்டு சாங்கர் அம்பேத்கர் ஆகியோரிடையே கடிதப் போக்குவரத்து இருந்ததாக கூட நிறுவ முடியாது. ஆனால் சாங்கர் ஆகியோர் அம்பேத்கரை நேரடியாக சந்தித்ததாக சொல்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ்.
எனவே அவர் மார்கரெட் சாங்கர் அம்பேத்கரை நேரில் சந்தித்து கருத்தடை குறித்து உரையாடியதாக சொல்லப்படுவது பொய்யான தகவலாகும்.
மேலும் அம்பேத்கர் காந்தியை தனிப்பட்ட முறையில் முட்டாள் என்று சொன்னதாக எந்த குறிப்பும் ஆவணமாக இல்லை.
ஒரு மதம் எத்தனை ஒடுக்குமுறை வாய்ந்ததாக இருந்தாலும் ஒருவர் தனது தாய் மதத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று சொல்லும் மத சீர்திருத்தவாதிகளை குறிப்பிடும் வகையில் 'முட்டாள்' என்ற வார்த்தையை அம்பேத்கர் பயன்படுத்தியுள்ளார் என்று சான்றுகள் சொல்கிறது. ஆனால் கருத்தடை பற்றிய அபிப்பிராயத்திற்காக காந்தியை 'முட்டாள்' என்று அம்பேத்கர் சொன்னதாக பரப்பப்படுவது பொய்யான தகவலாகும்.
முடிவு:
மார்கரெட் சாங்கர், மேரி ஸ்டோப்ஸ் ஆகியோர் 1920களில் இந்தியா வந்ததாகவும், அம்பேத்கரை சந்தித்ததாகவும் அவரிடம் பெண்கள் கருத்தடை சம்பந்தமாக உரையாடியதாகவும், அப்போது அம்பேத்கர் காந்தியை 'அவர் ஒரு முட்டாள்'என்று சொன்னதாகவும் சாலின் மரியா லாரன்ஸ் கூறும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இட்டுக்கட்டப்பட்டவை.