யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அட்டையில் செய்த மாட்டினை சிறுவர்கள் வெட்டி அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பது போன்ற வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை. அது மலேசியாவில் உள்ள ஒரு இஸ்லாமியப் பள்ளியில் எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
குறைந்தது 1000 பேருக்காவது தெரியவேண்டும் நம் இந்து பிள்ளைகளை இப்படிதான் வளர்க்கிறோமா..? ஆரம்பிக்கிறேன் கொண்டு சேர்ப்பது சங்கிகள் கடமை செய்வீர்கள் என நம்புகிறேன் ஆயிரம் வேண்டும்.
விரிவான விளக்கம்
அட்டையில் செய்த மாட்டை சிறுவர்கள் வெட்டி அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வலதுசாரி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. இது இந்தியாவில் நிகழ்ந்தது போன்றும் இதில் இந்து மத சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது போன்றும் இந்த வீடியோவில் சித்தரிக்கப்படுகிறது.
குறைந்தது 1000 பேருக்காவது தெரியவேண்டும் நம் இந்து பிள்ளைகளை இப்படிதான் வளர்க்கிறோமா..?
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) July 16, 2024
ஆரம்பிக்கிறேன் கொண்டு சேர்ப்பது சங்கிகள் கடமை செய்வீர்கள் என நம்புகிறேன் ஆயிரம் வேண்டும். pic.twitter.com/ajeQCadq2I
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் 12வது வினாடியில் குழந்தைகளுக்குப் பின்னால் தோன்றக்கூடிய சுவரில் ’LC Prestij Teluk Pulai’ என்ற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு தேடியதில், அது மலேசியாவில், Selangor என்னும் பகுதியில் உள்ள ‘Little Caliphs’ (சிறிய முஸ்லிம் நாடு) என்னும் சிறுவர்களுக்கான பள்ளி என்பதை அறியமுடிந்தது.

அதன் பெயரிலேயே இஸ்லாத்தை பின்பற்றும் வகையில் செயல்படும் பள்ளி என்பதை அறியமுடிந்தது. மேற்கொண்டு பரவக்கூடிய வீடியோ குறித்து ஏதேனும் பதிவுகள் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
அப்பள்ளியின் பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஜூன் 21ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் 'பக்ரீத் குர்பானி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பண்டிகையான பக்ரீத்தின்போது ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தைப் பலியிடுவது வழக்கம். அதன் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாம் மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது.

பரவக்கூடிய வீடியோவிலேயே சிறுவர்கள் மற்றவர்களுக்கு இறைச்சியை (அட்டையில் செய்த மாதிரி இறைச்சி) பகிர்வது போல்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஹஜ் பயணம் செல்வது மாதிரியான பயிற்சி வீடியோக்களும் அவர்களது பக்கத்தில் காண முடிகிறது. மதம் தொடர்பாக மட்டுமின்றி படம் வரைதல், விளையாட்டு என இன்ன பிறவற்றையும் அப்பள்ளியில் கற்பிக்கப்படுகிறது.
இவற்றிலிருந்து பரவக்கூடிய வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதோ அதில் உள்ள சிறுவர்கள் இந்துக்களோ இல்லை என்பதை அறியமுடிகிறது.
முடிவு :
அட்டையில் செய்த மாட்டினை சிறுவர்கள் வெட்டி அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பது போன்ற வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல. அது மலேசியாவில் இஸ்லாமியச் சிறுவர் பள்ளி ஒன்றில் பக்ரீத் குர்பானி தொடர்பாக சித்தரித்து எடுக்கப்பட்டது.