யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதி குறித்தும், திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் பொய்யான தகவலை பேசிவருகிறார் பாஜகவைச் சேர்ந்த விஜயலட்சுமி.
பரவிய செய்தி
’கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதியை தமிழ்நாடு அரசு இன்னும் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கவில்லை’ என்றும் ‘கடந்த நான்கரையாண்டு கால திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் 4 மடங்கு உயர்ந்துவிட்டது’ என்றும் பாஜகவைச் சேர்ந்த விஜயலட்சுமி பரப்புகிறார்.
விரிவான விளக்கம்
’பேசு தமிழா பேசு’ என்ற யூட்யூப் தளத்திற்கு பேட்டியளித்த பாஜகவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், ‘கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதியை தமிழ்நாடு அரசு இன்னும் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கவில்லை. ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு தான் ஒன்றிய அரசு இந்த நிதியை வழங்குகிறது. இந்த நிதியை தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் வைத்திருப்பதால், அந்த ஏழை மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதில் சிக்கல் ஏற்படும்’ என்றும் ’கடந்த நான்கரையாண்டு கால திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் 4 மடங்கு உயர்ந்துவிட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து விடும் திமுக அரசு பேருத்துக் கட்டணத்தை உயர்த்துவதால் பெரும்பாலும் பேருந்துகளில் பணிக்கு செல்லும் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். இது இறுதியாக அந்த குடும்பத்தில் உள்ள பெண்களையும் தான் பாதிக்கும்’ என்றும் பேசினார்.
உண்மை என்ன?
முதலில், கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதி குறித்து தேடினோம். விஜயலட்சுமி சொல்லும் இந்த நிதி சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வரும் நிதியாகும் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த ’சமக்ர சிக்ஷா நிதி’யை தமிழ்நாட்டிற்கு கொடுக்காமல் ஒன்றிய அரசு நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருந்தது. தேசிய கல்விக் கொள்கை - 2020ன் படி தமிழ்நாட்டில் PM-SHRI பள்ளிகளை திறப்பது, மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பது ஆகிய நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ளாததால் இந்த நிதியை ஒன்றிய அரசு நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசு மீது வழக்கு தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்றம் கல்வி உரிமைச் சட்டம் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட அவசியமில்லை என்று சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிற்கு 2025 ஜூன் மாதம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.
அதன்பின்னர் தான் ஒன்றிய அரசு 2025 அக்டோபர் மாதம் 2024-25 ஆண்டிற்காக நிலுவையில் இருந்த நிதியான 362 கோடி ரூபாயையும், 2025-26 கல்வியாண்டிற்கான முதல் தவணை நிதியான 175.59 கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த நிதியை 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கைகளுக்காக தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் செலுத்தப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 2025 டிசம்பர் முதல் வாரத்தில் உறுதியளித்தது.
அடுத்ததாக, திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து தேடினோம். கிடைக்கும் செய்தி ஆதாரங்களின் படி, தமிழ்நாட்டில் கடைசியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது 2018 ஜனவரியில் தான் என்பது தெரியவருகிறது. அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது, எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025ஆம் ஆண்டில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணம் உயருமா என்று ஐயம் எழுந்தபோது கூட ’பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது’ என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். நான்கரையாண்டு திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை.

பேருந்து கட்டணம் உயர்வது குறித்து பாஜகவினரும் அதிமுகவினரும் பரப்பிய பொய் செய்தி குறித்து ஏற்கனவே நமது ‘You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தி எழுதியுள்ளோம்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உரிய நேரத்தில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிட்டது என்பதும், கடந்த நான்கரையாண்டு கால திமுக ஆட்சியில் ஒருமுறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதும் தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதி குறித்தும், திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் பொய்யான தகவலை பேசிவருகிறார் பாஜகவைச் சேர்ந்த விஜயலட்சுமி.