யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுகவை பாஜக கையகப்படுத்தியிருக்கிறது, பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக அதிமுகவை பயன்படுத்துகிறது என்று அதிமுகவை விமர்சனம் செய்துதான் பேசியிருக்கிறார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில், கன்னியாகுமரி பிரச்சாரக் கூட்டத்தில், ‘அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்நாட்டை உண்மையிலே பிரதிநிதித்துவப்படுத்திய அதிமுக தலைவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள்’ என்று ராகுல்காந்தி பேசும் சிறிய வீடியோவை பதிவிட்டு, ராகுல்காந்தி அதிமுகவிற்காக ஆதரவாக பிரச்சார மேடையில் பேசியதாக கிஷோர் கே சாமி சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
ராகுல் காந்தி ஒரு முடிவோட தான் இருக்கார் pic.twitter.com/yImd0VMkLv
உண்மை என்ன?
ராகுல்காந்தி கன்னியாகுமரியில் பேசிய முழு உரையயும் ’மின்னம்பலம்’ தளத்தில் காணமுடிந்தது.
அதில் “எங்கேயெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கேயெல்லாம் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு, அதன்பின்னர் டெல்லியில் இருந்து அந்தப் பகுதியை ஆள நினைக்கிறது பாஜக. ஆனால் இதை தமிழ் மக்களிடம் நேரடியாக சொல்வதற்கு அவர்களுக்கு தைரியமில்லை. அதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் பெரிய வரலாற்றை உடைய ஒரு இயக்கத்தை (அதிமுக) இப்போது கைவசப்படுத்தி இருக்கிறார்கள். அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்நாட்டை உண்மையிலே பிரதிநிதித்துவப்படுத்திய அதிமுக தலைவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு வெற்றுக் கூடாக மாறியிருக்கிறது. தற்போது அதிமுக பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக மாறிப்போய் இருக்கிறது. அதிமுகவின் இன்றைய தலைவர்கள் ஊழலில் திளைத்த காரணத்தால் இன்று மோடி அரசிடம் முழுமையாக சரணாகதி அடைந்திருக்கிறார்கள்” என்றுதான் பேசியிருகிறார்.
அதாவது, அதிமுகவை பாஜக கையகப்படுத்தியிருக்கிறது, பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக அதிமுகவை பயன்படுத்துகிறது என்று அதிமுகவை விமர்சனம் செய்துதான் பேசியிருக்கிறார்.
முடிவு:
ராகுல்காந்தி உரையிலிருந்து சிறு பகுதியை மட்டும் பதிவிட்டு, அதனைத் திரித்து ராகுல்காந்தி பிரச்சார மேடையில் அதிமுகவை புகழ்ந்து பேசியதாக கிஷோர் கே சாமி தவறாக பரப்புகிறார்.