யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் காவலர்களின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. இது கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ். பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சோகம், குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம். #பாதுகாப்பில்லா_திமுகமாடல் #Resign_Stalin
விரிவான விளக்கம்
“தமிழ்நாட்டில் காவலர்களின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ். பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சோகம், குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம்” என்று குறிப்பிட்டு செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இந்த செய்தியுடன், தந்தி டிவி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டையும் சேர்த்து பரப்பி வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்ததில், இது தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் தந்தி டிவி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் “கர்நாடகா“ என்று ஓரமாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
இது குறித்து, “The Hindu“ ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இது கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், நடைபெற்ற சம்பவம் என்பதை அறிய முடிந்தது. மேலும் அச்செய்தியில், “கர்நாடகாவின் மத்தூர் தாலுகாவில் உள்ள தனது சொந்த ஊரான கோரவனஹள்ளியில் நாய் கடித்த ஹிருத்திக்ஷா என்ற சிறுமியை, அவரது தாய் வாணி மற்றும் மாமா இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, காலை 11 மணியளவில் மண்டியாவில் போக்குவரத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்தச் செயல்பாட்டின் போது, சிறுமி இரு சக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்ததாகக் கருதப்பட்டது, பின்னால் வந்த ஒரு லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவர் மண்டியாவில் உள்ள MIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் “ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “Deccan Herald“ ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் செய்தி கர்நாடகாவில் நடைபெற்ற சம்வவம் தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் காவலர்களின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இது கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், நடைபெற்ற சம்பவம் என்பதையும் அறிய முடிகிறது.