யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இடஒதுக்கீட்டை பெற சாதி தேவைப்படுகிறது என்று கருணாநிதி பேசியதை சாதி பெருமை பெசியதகக் கூறி பரவும் எடிட் செய்யப்பட வீடியோ
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமூகத்தில் நிலவும் ஜாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், ஏற்றத்தாழ்வுகள் ஒழியவேண்டும் எனவும் பலரும் குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியே ஜாதி தேவைதான் எனக் கூறியதாக 0:25 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில் மு.கருணாநிதி ஜாதி தேவைதான் எனக் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறியமுடிந்தது.
பரவிவரும் வீடியோ Karikazha Chozhan என்ற யூடியூப் பக்கத்தில் 24 மார்ச்,2021ஆண்டு அன்று ‘’சாதி சான்று ஏன் ||| கலைஞர் உரை’’ என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பதை பார்க்கமுடிகிறது.
அந்த வீடியோவில் "ஆலவயல் சுப்பையா Ex MLA இல்லத் திருமண விழா" எனக் குறிப்பிட்டிருநத்தை கவனித்தோம்.
இந்த வார்த்தையைக் கொண்டு தேடியதில், Kalaignarist கலைஞரிஸ்ட் என்ற யூடியூப் பக்கத்தில் நவம்பர் 30, 2018 அன்று “18/01/1996 Ex MLA ஆலவயல் சுப்பையா இல்லத் திருமண விழாவில் சிறப்புரை ஆற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.க” என்றத் தலைப்பில் பரவி வரும் வீடியோவின் முழு பகுதியை பதிவு செய்திருப்பதை பார்க்கமுடிந்தது.
அதில் கலைஞர் கருணாநிதி பேசும்போது, சரியாக 14:35- வினாடியில் “ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் [என்று] சொல்கிறோம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா [என்றால்] இல்லை. இன்றைக்கு ஜாதி தேவைதான். எதற்கு? நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். நாங்கள் உயர முடியவில்லை, உயர முடியாமல் அழுத்தப்பட்டோம், ஒடுக்கப்பட்டோம். கல்வியில், வேலைவாய்ப்பில் எங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை.
அப்படி கிடைக்காததற்கு காரணம் உயர் ஜாதிக்காரர்கள், முன்னேறிய ஜாதிக்காரர்கள் முந்திக்கொண்டு, எங்களை மேலும் அழுத்திப் போட்டுவிட்டார்கள். ஆகவே எங்களுக்கு சில உரிமைகள் வேண்டும் எனவே இந்த ஜாதியை சொல்லிக்கொள்கிறோம் என்று ஒரு அடையாளத்துக்காகத்தான் ஜாதி சொல்லப்பட வேண்டுமே அல்லாமல், நாங்கள் தனித்துத்தான் வாழ்வோம் தனியாகத்தான் இருப்போம் என்பதற்காக அல்ல ஜாதி’’ ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஓதுக்கீட்டு உரிமையைப் பெற என்ன ஜாதி என்று சொல்லவேண்டிய சூழல் உள்ளது. இதற்காக மட்டுமே ஜாதி தேவை என மு.கருணாநிதி அவர்கள் பேசியுள்ளார்.
இதில், எந்த இடத்திலுமே ஜாதி பெருமை பேச ஜாதி தேவைதான் என்றோ, ஜாதிய மனப்பான்மையை நியாயப்படுத்தும் அவர் பேசவில்லை என்பது இதன் முழு வீடியோவில் தெளிவாகிறது.
இவற்றிலிருந்து, இடஒதுக்கீட்டை பெறுவது பற்றி கலைஞர் கருணாநிதி பேசியதில் ஒற்றை வார்த்தையை மட்டும் எடிட் செய்து சிலர் தவறாக திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
முடிவு :
இடஒதுக்கீட்டை பெறுவது பற்றி கலைஞர் கருணாநிதி பேசியதில் ஒற்றை வார்த்தையை மட்டும் எடிட் செய்து “ஜாதி தேவை “என்று கருணாநிதியே கூறிவிட்டார் என திரித்து தவறாக பரப்புகின்றனர் என்பது நம் தேடலில் தெளிவாகிறது.