யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற அவையில் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர்.
பரவிய செய்தி
ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்ட பிறகு, பின்வரும் காட்சியை கண்களை விரித்து பாருங்கள், நம் நாட்டில் இந்துக்களின் நிலை இதுதான்! அடுத்து என்ன? ஒவ்வொரு அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வந்தால் என்ன நடக்கும்???

விரிவான விளக்கம்
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர்-க்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மோடி தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்தது. மேலும், இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால், கடந்த ஐந்தாண்டுகளாக அங்கே தேர்தல் நடைபெறவில்லை.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்தது. அக்டோபர் 8ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று உமர் அப்துல்லா தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தது.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிட்டதால் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாக பதிவிட்டு 'நம் நாட்டில் இந்துக்களின் நிலை இதுதான்' என்று எக்ஸ் தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ANI News நவம்பர் 8 தேதி வெளியிட்டுள்ள வீடியோவை காண முடிந்தது. அதில் சட்டப்பிரிவு 370 பற்றிய விவாதத்தின் போது அமளி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து "JK Assembly Ruckus" என்ற Keywords-ஐ கொண்டு தேடுகையில், The Wire இணைய பத்திரிகையில் "Ruckus in J&K Assembly Over Resolution to Restore Special Status, Three BJP MLAs Marshalled Out" என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்ததை காண முடிந்தது.

அதன்படி, கடந்த நவம்பர் 6ஆம் தேதி காஷ்மீர்-க்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த நாளான நவம்பர் 7ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவை சேர்ந்த சுனில் சர்மா, 'இந்த தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும்' என்று கோரினார்.
'அவாமி இத்தேஹாத் கட்சி'யின் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் குர்ஷீத், "சட்டப்பிரிவு 370 மற்றும் 35 A ஆகியவற்றை மீண்டும் கொண்டுவர வேண்டும்" மற்றும் "அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்" என்று ஒரு பதாகையை தூக்கிப் பிடித்தார். இதனை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கியபோது, இதேபோல் பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் மீண்டும் மீண்டும் அமைதியாக இருக்கும்படி கோரியும் கேட்காததால், அவர்களை அவையை விட்டு வெளியேற்றும் படி உத்தரவிட்டார். அவைத் தலைவரின் உத்தரவின் பெயரில் மூன்று பாஜக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதிலிருந்து, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷம் எழுப்பியதற்காக அல்ல, சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அவையில் அமளியில் ஈடுபட்டதால் மூன்று பாஜக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது தெளிவாகிறது.
இதனைத் திரித்து ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷம் எழுப்பியதால் அவையில் இருந்த நீக்கப்பட்டனர் என்று தவறான தகவலை பரப்புகின்றனர். அந்த தவறான தகவலை பகிர்ந்து 'நம் நாட்டில் இந்துக்களின் நிலை இதுதான்' என்று மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பரப்புகின்றனர்.
முடிவு:
'பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷம் எழுப்பியதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் அவையில் அமளியில் ஈடுபட்டதால் மூன்று பாஜக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.