யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் சில அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கின்றன.
பரவிய செய்தி
உலக வரலாற்றில் முதன் முறையாக...
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் குழந்தை பெறும் வாய்ப்பு, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நவீன-fertility சிகிச்சை மருத்துவ சேவையை தமிழ் நாட்டில் விரிவுபடுத்துதல், மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கட்டணமில்லா IVF சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மையங்கள் குறித்த வாக்குறுதியை பதிவிட்டு, ’உலக வரலாற்றில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் வழங்கவிருப்பதாக அதிமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.
உலக வரலாற்றில் முதன் முறையாக...
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் குழந்தை பெறும் வாய்ப்பு, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நவீன-fertility சிகிச்சை மருத்துவ சேவையை தமிழ் நாட்டில் விரிவுபடுத்துதல், மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்… pic.twitter.com/4C4Y94DXUe
உண்மை என்ன?
முதலில், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியிலே, ”ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நவீன-fertility சிகிச்சை மருத்துவ சேவையை தமிழ் நாட்டில் விரிவுபடுத்துதல்” என்று குறிப்பிடப்படுள்ளதைக் காண்கிறோம். இதில் ‘விரிவுபடுத்துதல்’ என்ற வார்த்தை இந்த திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் அமலில் உள்ளதைத் தான் குறிக்கிறது.

இந்த திட்டம் குறித்த தகவல்களைத் தேடிய போது, 2016 நவம்பர் ‘இந்து தமிழ் திசை’யில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ’மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாகவும்; இதற்காக ரூ.1 கோடியில் நவீன மருத்துவ கருவிகள் வாங்குவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதலுக்காக மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

மேலும், 2024 ஜூன் மாதம் ‘விகடன்’ தளத்தில் வெளியான செய்தியில், ’சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்ததகாவும், தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவாகும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் இலசமாக சிகிச்சை அளிக்கப்படும்’ என்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இதிலிருந்து, இந்த செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை என்பது தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ஒன்று தான் என்பதும், அதனால் தான் தேர்தல் அறிக்கையிலே இத்திட்டத்தை குறித்து பேசும் போது ‘விரிவுபடுத்துதல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தி வரும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மையங்கள் விரிவுபடுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ளதை திரித்து, உலகிலே முதன்முறையாக அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை அதிமுக அமைக்கவிருப்பதாக தவறாக பரப்புகிறார்கள்.