யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பொக்கே-யை (Bouquet) எடுப்பதற்காக அவசரமாக ஓட்டுநர் இறங்கிச் சென்ற வீடியோ திரித்து, அவர் வேலையை விட்டுச் சென்றுவிட்டதாக தவறாக பரப்பிவருகிறார்கள்.
பரவிய செய்தி
ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்த ஓபிஎஸ். அம்மாவின் மீதுள்ள அளவற்ற பற்றால் ஓபிஎஸ் டிரைவர் போடா நீயும் உன் வேலையும்னு உதறிவிட்டு தன்மானத்துடன் நடந்து கொண்டார்.
இந்த அவமானம் தேவையா @OfficeOfOPS

விரிவான விளக்கம்
’ஓ.பன்னீர் செல்வத்தின் கார் ஓட்டுநர் அவசரமாக காரிலிருந்து இறங்கி செல்கிறார். அந்த காரின் கதவைக் கூட மூடாமல் அப்படியே விட்டு செல்கிறார். பன்னீர் செல்வம் எதற்காகவோ காத்துக்கொண்டு நிற்கிறார்’. இந்த சில நொடிகள் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மார்ச் 1ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஓ.பன்னீர் செல்வம் அறிவாலயம் சென்ற போது, அதிமுக விஸ்வாசியான அந்த ஓட்டுநர் அப்போதே வேலையை விட்டு சென்றுவிட்டதாக பரப்பி வருகிறார்கள்.
அசிங்கப்பட்ட ஓபிஎஸ்
ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்த ஓபிஎஸ்
அம்மாவின் மீதுள்ள அளவற்ற பற்றால்
ஓபிஎஸ் டிரைவர் போடா நீயும் உன் வேலையும்னு உதறிவிட்டு தன்மானத்துடன் நடந்து கொண்டார்.
இந்த அவமானம் தேவையா@OfficeOfOPS 🤦 pic.twitter.com/m0KMePqxam
உண்மை என்ன?
இது சம்பவம் குறித்து தேடியபோது, இந்த சம்பவத்திற்கு அந்த ஓட்டுநர் விளக்கமளித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் காணமுடிந்தது.
அந்த ஓட்டுநர் கூறுகையில், “நாங்கள் போர்டிகோவில் வண்டியை நிறுத்தியபோது, அவர் (ஓ.பன்னீர் செல்வம்) பொக்கே-யை (Bouquet) எடுத்துக்கொண்டு சீக்கிரமாக வண்டியை ஓரமாக நிறுத்து, பின்னாடி மற்ற வண்டிகள் வந்து கொண்டிருக்கிறது என்றார். அப்போது அவருடன் நான் மட்டும் தான் இருந்தேன். அதனால் நானே சீட் பெல்டை கழற்றிவிட்டு இறங்கி பொக்கே-வை எடுக்கப்போனேன்.
இதை இவர்கள் Content-ஆக மாற்றி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நானே சாதாரண டிரைவர் என் பொழப்பில் ஏன் மண்ணள்ளி போட்றாங்க! நான் அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டேன் என்று சொல்கிறார்கள், ஆனால் அறிவாலயத்திற்கு போயிவிட்டு திரும்பி வந்த அவரை நான் தான் Pick up பண்ணி Airport கூட்டிட்டு போனேன்.
நான் இப்பவும் ஐயா (ஓ.பன்னீர் செல்வம்) கூடத்தான் இருக்கேன். ஐயா விட்டு நான் எங்கேயும் போமாட்டேன், கடைசி வரைக்கும் ஐயா கூடத்தான் இருப்பேன்” என்றார்.
முடிவு:
முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஓ.பன்னீர் செல்வம் அறிவாலயம் வந்த போது, பொக்கே (Bouquet) எடுப்பதற்காக அவரசமாக காரிலிருந்து ஓட்டுநர் இறங்கிச் சென்ற சம்பவத்தை திரித்து, ஓட்டுநர் வேலையை விட்டுவிட்டு சென்றதாக தவறாக பரப்புகிறார்கள்.