யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
NABARD வங்கி உதவியுடன் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் திமுக ஆட்சியில் 2024ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
பரவிய செய்தி
திமுக அரசாங்கம் அரசு பள்ளிகளை மொத்தமாக கைவிட்டுவிட்டது. ஆனால் தவெக அரசு NABARD வங்கி உதவியுடன் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2026-27 ஆண்டிற்காக 80 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது.

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த NABARD வங்கியும் தமிழ்நாடு அரசும் சேர்ந்து நிதி ஒதுக்கியுள்ளது குறித்த அரசு ஆவணத்தை பதிவிட்டு, ‘திமுக அரசாங்கத்தைப் போல் தவெக அரசாங்கம் அரசு பள்ளிகளை மொத்தமாக கைவிட்டுவிடவில்லை. தவெக அரசு NABARD வங்கி உதவியுடன் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2026-27 ஆண்டிற்காக 80 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.
Under the DMK regime, government schools were totally neglected. Students had to study in crumbling buildings without basic drinking water or clean sanitation.
Now @TVKVijayHQ government has decided to fix it. To elevate the standard of school infrastructure across Tamil Nadu, a… pic.twitter.com/OgS4SdSwlE
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த ஆவணத்திலே 13/08/2025 அன்று பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அரசாணை (G.O) குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி, முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சி என்பதை காட்ட இதுவே போதுமானது.
மேலும், பள்ளிகளை மேம்படுத்த திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும். திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2023ஆம் ஆண்டில் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக ஐந்தாண்டுகளுக்கு சேர்த்து 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் 2,497 கோடிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தன.

மேலும் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) உடன் இணைந்து பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2024 ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் NABARD வங்கி 85 சதவீத நிதியும் தமிழ்நாடு அரசு 15 சதவீத நிதியும் கொடுக்கும். அதன்படி, 2024ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக மொத்தமாக 745.27 கோடிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 633.48 கோடி ரூபாய் (85 %) NABARD வங்கியும், 111.79 கோடி ரூபாய் (15 %) தமிழ்நாடு மாநில அரசும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது நிதியில் கூட 68.54 கோடி ரூபாய் NABARD வங்கியும், 12.09 கோடி ரூபாய் (15 %) தமிழ்நாடு மாநில அரசும் ஒதுக்கியதுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, NABARD வங்கி உதவியுடன் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் திமுக ஆட்சியிலே செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
திமுக ஆட்சியிலே செயல்படுத்தப்பட்டு வந்த அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை தவெக அரசு புதிதாக தொடங்கியதாக திரித்துப் பரப்புகிறார்கள்.