யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உடுமலைப்பேட்டையில் இயங்கிவருவது ஒன்றிய அரசின் ’Kendriya Vidyalaya Sangathan’ கீழ் செயல்படும் CBSE பள்ளி ஆகும். இப்பள்ளி தொடங்கப்படும் போது PM SHRI திட்டம் தொடங்கப்படவே இல்லை.
பரவிய செய்தி
#pmshri school நாங்க இருக்க வரைக்கும் கொண்டு வரவே இல்ல மத்திய அரசு அப்படின்னு திமுக காரனுங்க சொல்லுவானுங்க ...
# மாநில அரசுக்கு தெரியாமையா உடுமலைப்பேட்டையில் இவ்வளவு பெரிய ஸ்கூல் வந்து இருக்கு ...
# தவெக காரங்க சேவ் பன்னி வெச்சிகுங்க பசங்களா...

விரிவான விளக்கம்
தேசிய கல்விக் கொள்கையின் அங்கமாக இந்தி மொழியை திணிப்பதால் PM SHRI பள்ளிகள் திட்டத்தை முந்தைய திமுக அரசு தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் இருந்ததது.
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட்கள், வி.சி.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்து தவெக கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாமல் இருந்த நிலையிலே, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் PM-SHRI திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கோரி தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியிருந்ததது.
இந்நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் இருந்தே உடுமலைப்பேட்டையில் PM SHRI பள்ளி இயங்கிவருவதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பள்ளி குறித்து தேடினோம். உடுமலைப்பேட்டையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி என்பது ஒன்றிய அரசின் ’Kendriya Vidyalaya Sangathan’ கீழ் செயல்படும் CBSE பள்ளி ஆகும். இப்பள்ளி, மத்திய அரசு வேலையில் இருக்கும் ஊழியர்கள் அடிக்கடி பணி மாறுதலுக்கு உள்ளாவதால், அவர்களது குழந்தைகளுக்கு நிலையான கல்வியை கொடுக்க ஏற்படுத்தப்பட்ட CBSE பள்ளி என்று அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்திலே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி, PM Schools for Rising India (PM SHRI) திட்டம் என்பது ஏற்கனவே ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளூராட்சியின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளை மேம்படுத்தி அந்த பகுதியிலே மாதிரிப் பள்ளியாக மாற்றுவது தான் என்பது தெரியவருகிறது. இதனால் PM SHRI பள்ளிகள் என்பது ஒன்றிய அரசின் நிதியில் புதிதாக கட்டப்படும் பள்ளிகளை குறிப்பதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இத்திட்டத்தின் படி, இதுவரை 834 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் PM SHRI திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக உள்ள 24 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், இரண்டாம் கட்டமாக 10 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் PM SHRI திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் PM SHRI திட்டம் தொடங்கப்பட்டது 2022 செப்டம்பரில் தான். ஆனால் உடுமலைப்பேட்டையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
2019ஆம் ஆண்டிலிருந்தே இயங்கிவரும் உடுமலைப்பேட்டை கேந்திரிய வித்யாலயா பள்ளியை PM SHRI திட்டத்தில் கீழ் கட்டப்பட்டதாக தவறாக பரப்பிவருகிறார்கள்.