யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக அரசு 2021 ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலை குறைப்பு செய்யப்பட்டது. மீண்டும் இந்த விலை உயர்த்தப்படவில்லை.
பரவிய செய்தி
ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது என மக்கள் கேள்வி? விலை குறைப்பிற்கு பதிலாக, தற்போது இருமடங்கு (6 ரூபாய்) விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

விரிவான விளக்கம்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், ஆவின் பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்’ என்ற வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
அத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்து தற்போது ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில், ‘தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி ஆவின் பால் விலையை திமுக அரசு குறைக்கவில்லை. அதற்கு மாறாக ஆவின் பால் விலையை ரூபாய். 6 வரை உயர்த்திவிட்டதாக’ தவெக கட்சியினரால் பரப்பப்படுகிறது.
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_NewsTrichy) January 6, 2026
உண்மை என்ன?
ஆவின் பால் விலை குறைப்பு பற்றிய செய்திகளை தேடினோம். அப்போது 2021ஆம் ஆண்டு மே மாதம் ‘மாலை முரசு’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியைக் காணமுடிந்தது. அதில் ‘திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இரண்டாவது முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டது ஆவின் பால் விலை குறைப்பு பற்றி கோப்பில் தான் என்றும் 2021 மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கு விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய தினத்தில் ஆவின் விலை குறித்து தேடியபோது, ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பச்சை பால் அரை லிட்டர் விலை ரூ. 22 மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, திமுக அரசு 2021 ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதும் மீண்டும் இந்த விலை உயர்த்தப்படவில்லை என்பதும் நிரூபணமாகிறது.
முடிவு:
திமுக அரசு ஆட்சிக்கு வந்து கொடுத்த வாக்குறுதியின் படி ஆவின் பால் விலையை குறைக்கவில்லை, அதற்கு மாறாக விலையை உயர்த்தியிருக்கிறது என்று தவெக ஆதரவாளர்களால் தவறாக பரப்பப்படுகிறது.