யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படங்கள் எல்லாம் 2024,2025 ஆகிய ஆண்டுகளிலே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது
பரவிய செய்தி
சாதித்து காட்டிய #நாம்தமிழர்கட்சி!
அரசு போக்குவரத்து கழகம் என்று இருந்ததை ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என மாற்றம்.


விரிவான விளக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் வெறுமனே ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்று தான் எழுதப்படுகிறது. அதில் ‘தமிழ்நாடு’ என்று சேர்த்து எழுதப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியினர் சமீபத்தில் பல இடங்களில் போராடி வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக ‘தமிழ்நாடு’ என்று எழுதப்படாத பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று எழுதப்பட்டிருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு, நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தின் விளைவாக பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று அரசு எழுத தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
தமிழ்நாடுன்னு பஸ்ல போட இப்போ இடம் வந்துருச்சு😂😂💥💥
Well done #NTK guys💥💥 pic.twitter.com/2LyoTbMACk
நீங்கள் போராட்டம் நடத்தினால் என்ன நடத்தாவிட்டால் என்ன.. No use bro அப்படின்னு தற்குறி தனமான புரிதலோடு எங்களை மதிப்பீடு செய்தவர்களுக்கான பதிவு...
சாதித்து காட்டிய #நாம்தமிழர்கட்சி 🔥
அரசு போக்குவரத்து கழகம்
என்று இருந்ததை 👇
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றம் pic.twitter.com/jUMSkmCKDk
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படங்களை ‘Reverse Image Search’ முறையில் தேடினோம். அப்போது Facebook, Instagram, Reddit ஆகிய சமூக வலைதளங்களில் ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்ற எழுதப்பட்ட பேருந்துகளின் வெவ்வேறு புகைப்படங்களை காணமுடிந்தது.

மேலும் இந்த புகைப்படங்கள் எல்லாம் 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

இதிலிருந்து, பரப்பப்படும் இந்த புகைப்படங்கள் பழையது என்பது தெரிய வருகிறது. ‘நாதக’ நடத்திய போராட்டத்தால் தான் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சேர்க்கப்பட்டது என்பதற்கான எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லை.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியிலிருந்தே புதிதாக வாக்கப்பட்ட பல அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதை நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.
முடிவு:
நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று மீண்டும் எழுத தொடங்கியிருப்பதாக பரப்பப்படுவது தவறான தகவலாகும். பரப்பப்படும் புகைப்படங்கள் எல்லாம் ஓராண்டுக்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது தான்.