யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அந்த பெண் போராட்டக்காரர் என்று நினைத்து தான் காவலர்கள் அவரை முதலில் தடுத்து நிறுத்தவும் பின்னர் கைது செய்யவும் முயற்சித்திருக்கிறார்கள்.
பரவிய செய்தி
Judges court Karnataka police shameful bloodies.
இந்து எதிர்ப்பு கர்நாடக அரசு சாமுண்டா தேவி கோவில் வெளியே ஒரு பெண், கோவிலில் இருந்து திரும்பவரும் கணவருக்காகக் காத்திருக்க கர்நாடக போலீசார் அவளை ஒரு போலீஸ் வேனில் தள்ளத் தொடங்க.. அந்தப் பெண் அழ.. அவள் செய்த குற்றம், காவி சேலை!


விரிவான விளக்கம்
’புடவை அணிந்த பெண் ஒருவருக்கும் பெண் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதில் அந்த புடவை அணிந்த பெண் 'நான் ஏன் கோவிலுக்கு செல்லக்கூடாது, ஏன் தடுக்கிறீர்கள்?' என்று காவலர்களிடம் கேட்கிறார். பின்னர், காவலர்கள் அவரை காவல் வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கிறார்கள். அவர் உடைந்து அழுகிறார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் கணவர் வந்து அவரை அழைத்துச் செல்கிறார்’. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பதிவிட்டு, ’இந்த சம்பவம் சாமுண்டா தேவி கோவில் வெளியே நடந்ததாகவும், அந்த பெண் காவி புடவை அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக கர்நாடக போலீசார் அவரை இவ்வாறு நடத்துகிறார்கள்’ என்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
Judges court
Karnataka police shameful bloodies இந்து எதிர்ப்பு கர்நாடக அரசு
சாமுண்டா தேவி கோவில் வெளியே ஒரு பெண், கோவிலில் இருந்து திரும்பவரும் கணவருக்காகக் காத்திருக்க
கர்நாடக போலீசார் அவளை ஒரு போலீஸ் வேனில் தள்ளத் தொடங்க.. அந்தப் பெண் அழ.. அவள் செய்த குற்றம், காவி சேலை pic.twitter.com/WTNiiaQqUi
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘கன்னட பிரபா’ என்ற துளு மொழி பத்திரிகையில் இந்த சம்பவம் குறித்த செய்தியைக் காணமுடிந்தது. கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், இந்த சம்பவம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.

‘தசரா திருவிழாவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை கண்டித்து ‘இந்து ஜாக்ரன் வேதிகே’ என்ற இந்துத்துவ அமைப்பு, மலை மேல் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்லும் போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டக்காரர்களை கோவிலுக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த நேரத்தில் பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் பெண் இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருக்கிறார். இவரையும் போராட்டக்காரர் என நினைத்து பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும் போது ’நான் தரிசனம் செய்யதான் கோவிலுக்குதான் வந்தேன், போராட வரவில்லை’ என்று சொல்லி அழுதுள்ளார். நிலைமையை புரிந்துகொண்ட அங்கிருந்த காவல்துறை உயரதிகாரிகள் அந்த பெண்ணையையும் அவரது கணவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ’STAR OF MYSORE’ என்ற இணைய பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியிலும் இதே விளக்கம் இருப்பதை காண்கிறோம்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த பெண் காவி புடவை அணிந்ததற்காக போலீசார் அவரை கைது செய்ய முயற்சிக்கவில்லை என்பதும், அவரும் போராட்டக்காரர் என்று நினைத்து தான் காவலர்கள் அவரை முதலில் தடுத்து நிறுத்தவும் பின்னர் கைது செய்யவும் முயற்சித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.
முடிவு:
கோவிலில் போராட வந்தவர் என்று தவறாக புரிந்துகொண்டதால் நடந்த இந்த சம்பவத்தை திரித்து, காவி புடவை உடுத்திய காரணத்திற்காக இந்த பெண் கர்நாடக போலீசாரால் இவ்வாறு நடத்தப்பட்டதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.