யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த தடியடி சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நடந்தது
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காவல்துறை லத்திக் கம்பைக் கொண்டு போராட்டக்காரர்களை கடுமையாக தாக்குகிறார்கள். அந்த போராட்டக்காரர்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகனும் இருக்கிறார். அவரையும் காவல்துறையினரில் ஒருவர் தாக்குகிறார். காவல்துறையினருடன் வேல்முருகன் வாக்குவாதம் நடத்துகிறார். இந்த காட்சிகளை கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் சமீபத்தில் நடந்ததாக பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக எவ்வித செய்தி ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இதனால், ’தமிழ்நாடு காவல்துறையால் ’தவாக’ தலைவர் வேல்முருகன் தாக்கப்பட்டது’ என்ற keywords கொண்டு தேடினோம். ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில் ’திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைகளை மூட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ’One India’ செய்தித்தளத்தில் 2015 அக்டோபர் மாதம் இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இருந்து கோககோலா, பெப்சி ஆலைகள் வெளியேறவேண்டும் என்று 2015ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமைதி வழியில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் போலீஸார் கொடூரமாக தடியடி தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீஸ் நடத்திய தடியடியால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.
இதிலிருந்து பரப்பப்படும் வீடியோவில் உள்ள இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பது தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
பத்தாண்டுகளுக்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு, தற்போது நடந்த தடியடி சம்பவம் என்று தவறாக பரப்புகிறார்கள்.