யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான முடிவு அல்ல. சபரிமலை ஐயப்பன் கோவிலின் நிர்வாகம் ’திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம்’-திடம் இருக்கிறது. அதுதான் கோவில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கமுடியும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கேரள விஸ்வ இந்து பரிஷத் (VHP) என்னும் இந்துத்துவ அமைப்பின் தலைவர் விஜி தம்பி, ”ஐயப்பனுடன் தொடர்புடைய வரலாற்றில் வாவர் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் இருந்ததே இல்லை என்பது தேவபிரஸ்னத்தின் மூலம் மூன்று முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதியில் தரிசனம் செய்வது மரபு மற்றும் பழக்க வழக்கங்களுக்கு எதிரானது. இதனால், வாவர் சன்னதி அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.
இதனை ஆதாரமாகக் கொண்டு, சரவண பிரசாத் என்ற மோடி ஆதரவாளர் ’சபரிமலையில் உள்ள வாவர் நடையை அப்புறப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று பரப்பிவருகிறார். வாவர் நடையை அகற்றும் இந்த முடிவை கேரளாவின் ஆன்மீக குருகள் எடுத்துள்ளதாக ’இந்து மக்கள் கட்சி’யும் தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ கணக்கின் வழியாக பரப்புகிறது.
உண்மை என்ன?
பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படும் இந்த தகவலில் இருக்கும் News card, கேரள விஸ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பின் தலைவர் விஜி தம்பி பேசியதாக ‘Janam TV’ல் வெளியிடப்பட்டதாகும்.

முதலில் வாவர் மசூதி, வாவர் சன்னதி என்று இரண்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
சபரிமலையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எருமேலியில் வாவர் மசூதி என்று அழைக்கப்படும் நினார் மசூதி உள்ளது. ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை தொடக்கும் முன்பு வாவர் மசூதியில் வணங்கிவிட்டுச் செல்வார்கள்.
வாவர்-க்கும் ஐயப்பனுக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்ததாகச் சொல்லும் புனைவுக் கதைகள் மக்கள் நம்பிக்கையின் அங்கமாக இருக்கிறது. அதனால்தான், சபரிமலை கோவிலில் 18ஆம் படிக்குச் சற்று கீழே ’வாவர் சன்னதி அல்லது வாவர் நடை’ இடம்பெற்றிருக்கிறது. உருவ வழிபாடு கூடாது என்ற முஸ்லிம் நம்பிக்கைக்கு ஏற்ப இங்கே சிலை இல்லாமல், பச்சை நிற பட்டுத்துணி இருக்கும். இந்த வகையில் வாவர் நடை, இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கிறது.
கேரள சமூகத்தில் நிலவிவரும் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் அங்கே பாஜக ஏற்கனவே வேலைகள் செய்து வருகிறது. கேரளாவில் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், கிறிஸ்துவர்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் விஷயமாக வக்ஃப் சட்டத்திருத்தப் பிரச்சினை இருக்கிறது. இந்த தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, கேரள பாஜக வகுப்புவாதத்தை தூண்டிவிட முயன்று வருகிறது.

கேரள பாஜகவின் மூத்த தலைவர் கோபாலகிருஷ்ணன், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘18ஆம் படிக்குச் கீழே இருக்கும் இந்த வாவர், நாளையே இந்த நிலத்தை வக்ஃபுக்கு கொடுத்ததாகக் கூறினால், சபரிமலை வக்ஃபு வாரியத்திற்குச் சென்றுவிடும். அதன்பின்னர், ஐயப்பனே சபரிமலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதை நாம் அனுமதிக்க வேண்டுமா?’ என்று பேசினார்.

2024 வக்ஃப் திருத்த மசோதாவைச் சுற்றியுள்ள சர்ச்சைகளைக் கொண்டு, சபரிமலையில் நிலவும் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது கோபாலகிருஷ்ணனின் பேச்சு.
இந்த சூழலில்தான் சபரிமலையை அரசாங்கத்தின் பிடியிலிருந்து ‘விடுவித்து’ பக்தர்களின் கைகளில் அதன் நிர்வாகத்தை ஒப்படைக்கப் போவதாகச் சொல்லி, நடத்தப்படும், ”Save Sabarimala Action Committee” என்ற குழுவின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, ‘’சபரிமலையில் உள்ள வாவர் நடையை அப்புறப்படுத்த வேண்டும்" என்ற விஷயத்தைப் பேசியிருக்கிறார் விஸ்வ இந்து பரிஷத் (VHP) தலைவர் விஜி தம்பி.
மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலின் நிர்வாகம் ’திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம்’-திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வ இந்து பரிஷத் (VHP) என்ற இந்துத்துவ அமைப்பின் வழிமொழிதலை அடிப்படையாகக் கொண்டு வாவர் சன்னதியை அகற்றமுடியாது. இதனை அதிகாரப்பூர்வமான உத்தரவாகக் கருத முடியாது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தான் இதுபற்றி முடிவு செய்யவேண்டும்.
இதிலிருந்து, ’சபரிமலையில் உள்ள வாவர் நடையை அப்புறப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்பது எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான முடிவு அல்ல என்பது தெளிவாகிறது. இது அதிகாரப்பூர்வமாக தீர்மானிக்கப்பட்டது என்ற கோணத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
முடிவு:
’சபரிமலையில் உள்ள வாவர் நடையை அப்புறப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்பது அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு என்ற கோணத்தில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பாஜக ஆதரவாளர்களால் இவ்வாறு தவறாகப் பரப்பப்படுகிறது.
