யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில்’ முறையீடு செய்யவும், சிறப்பான சூழ்நிலைகளில் இந்தத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவையும் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வழிமுறையும் பழைய சட்டத்தில் இருந்தது.
பரவிய செய்தி
அதுல என்ன ட்விஸ்ட்னா. அந்த சட்ட திருத்தத்துல முக்கியமான சட்ட திருத்தமே வஃக்ப் வாரியத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் போக முடியாதுனு இருந்ததை நீதிமன்றம் போகலாம்னு கொண்டு வந்ததுதான்.
ஆனால் நம்ம முதல்வர் என்ன சொல்ல வாராருனா அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் போக அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டு அந்த திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றம் போறதுதான். அதாவது பாதிக்கப்பட்ட ஒரு இந்துவோ கிறிஸ்துவரோ இஸ்லாமிய வஃக்ப் வாரியத்தை எதிர்த்து நீதிமன்றம் போக உரிமை இல்லைனு நீதிமன்றம் போக போறாரு...
#ஆக வேற லெவல் ...

விரிவான விளக்கம்
நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஏப்ரல் 4ஆம் தேதி ’வக்ஃப் (திருத்த) மசோதா-2025’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 288 MP-களும் எதிராக 232 MP-களும் வாக்களித்தனர். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த மசோதா திரும்பப் பெறப்படவேண்டும். பெரும்பாலான அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு வந்த போதிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் செல்லும்” என்று குறிப்பிட்டார்.
அதுல என்ன ட்விஸ்ட்னா
அந்த சட்ட திருத்தத்துல முக்கியமான சட்ட திருத்தமே வஃக்ப் வாரியத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் போக முடியாதுனு இருந்ததை நீதிமன்றம் போகலாம்னு கொண்டு வந்ததுதான்
ஆனால் நம்ம முதல்வர் என்ன சொல்ல வாராருனா அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் போக… pic.twitter.com/3dRnn3qkMV
இந்நிலையில் ’இதுவரை வக்ஃப் வாரியத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாத நிலையிருந்ததாகவும், அதனை இந்த சட்டத் திருத்தம் மாற்றி வக்ஃப் வாரிய சொத்து தொடர்பான சர்ச்சையின் போது நீதிமன்றத்தை அணுகமுடியும் என்று கொண்டு வந்ததாகவும்’ மோடி ஆதரவாளரான சரவணபிரசாத் பாலசுப்ரமணியன் என்பவர் எக்ஸ் தளத்தில் பரப்பிவருகிறார்.
உண்மை என்ன?
வக்ஃப் சொத்து குறித்த சர்ச்சைகள் கையாளப்படுவது குறித்து ’வக்ஃப் சட்டம் 1995’ மற்றும் ’வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ ஆகியவை என்ன கூறுகிறது என்பதை ஆய்வு செய்தோம்.

1995 ஆண்டு வக்ஃப் சட்டத்தின் 6ஆவது சரத்தின் படி, ’வக்ஃப் சொத்து சம்பந்தமான சர்ச்சைகள் மாவட்ட நீதிபதி அல்லது குடிமை நீதிபதி, இஸ்லாமியச் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில் (Waqf Tribunal)’ வழக்காகத் தொடுக்கப்படும் என்றும் அதில் வக்ஃப் தீர்ப்பாயம் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சரத்து 40ல், வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை மாற்றியமைக்கும் அதிகாரம் வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு இருப்பதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டின் பழைய சட்டம், இந்த வக்ஃப் தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது என்றும் சில சிறப்பான சூழ்நிலைகளில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கமுடியும் என்றும் குறிப்பிடுகிறது.

’வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ இந்த வக்ஃப் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை நீக்குவதோடு, 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்றும் மாற்றியிருக்கிறது.
இதிலிருந்து 1995 ஆண்டின் பழைய வக்ஃப் சட்டத்திலே ’வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து வக்ஃப் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யும் வழி இருப்பது தெளிவாக விளங்குகிறது.
முடிவு:
வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில்’ முறையீடு செய்யவும், சிறப்பான சூழ்நிலைகளில் இந்தத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவையும் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வழிமுறையும் பழைய வக்ஃப் சட்டம் 1995லே உள்ளது. தற்போதைய சட்டம் தீர்ப்பாயத்தின் எல்லா முடிவுகளையுமே 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்று மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. இதனை மறைத்து, வக்ஃப் வாரித்தின் முடிவை எங்குமே மேல்முறையீடு செய்யமுடியாத நிலை பழைய சட்டத்திலிருந்ததாக திரித்துப் பரப்பப்படுகிறது.