யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னையில் உ.வே.சா வாழ்ந்த வீடு 2014ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பழைய செய்தி இது. அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
திருட்டு திமுக மிஷினரி ஆட்சியில் சென்னையில் "தமிழ் தாத்தா" உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் வீடு இடிப்பு.
தமிழனுக்கு இதைவிட கேவலம் உண்டா?

விரிவான விளக்கம்
வீடு ஒன்று இடிக்கப்படும் புகைப்படத்தைக் கொண்டு, ‘சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு’ என்ற தலைப்பில் உள்ள செய்தியை பதிவிட்டு, ‘திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் வீடு இடிக்கப்படுகிறது’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் பாஜக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
மேலும், உ.வே.சா வீட்டை இடிக்கும் இதே திமுக அரசு தான் கால்டுவெல் நினைவு இல்லத்தை புதுப்பிக்க 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றும் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்பட செய்தியிலே ‘டிசம்பர் 2014’ என்று பழைய தேதி குறிப்பிடப்பட்டுள்ளதை காண்கிறோம். மேலும், உ.வே.சா வீடு இடிக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடியபோது, ‘தினமணி’ செய்தித்தளத்தில் 2014 டிசம்பர் 14ஆம் தேதியன்று வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சா வசித்த வீடு அவரது உறவினர்களின் பராமரிப்பில் இருந்ததாகவும், பின்னர் அது பிறருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும்’ குறிப்பிடுகிறது. மேலும், ‘இந்த வீட்டை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர்கள் வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழுக்கு உ.வே.சா அளித்த பங்களிப்பை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு எதேனும் நினைவு இல்லம் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்று தேடினோம். கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘தினமலர்’ செய்தித்தளத்தில் ‘உ.வே.சா. நினைவு இல்லம் பூட்டியே கிடக்கும் அவலம்’ என்ற தலைப்பில் வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

அதில், ‘கடந்த 2008ஆம் ஆண்டு இருபத்து மூன்று லட்சம் ரூபாய் செலவில் திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரத்தில் பிறந்த உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு கட்டிக் கொடுத்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சென்னையில் உ.வே.சா வாழ்ந்த வீடு 2014ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீட்டை தமிழ்நாடு அரசு இடிக்கவில்லை. இந்த வீடு உ.வே.சா-வின் உறவினர்களால் விற்கப்பட்டு, அதனை வாங்கிய தனியார் உரிமையாளர் தான் இடித்துள்ளார். மேலும், திருவாரூர் மாவட்டம் உத்தமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசால் உ.வே.சா- வின் நினைவு இல்லம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதும் தெரிகிறது.
முடிவு:
கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையில் உ.வே.சா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்ட பழைய செய்தியைக் கொண்டு, அந்த வீடு தற்போது திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டதாக பாஜக ஆதரவாளரால் தவறாக பரப்பப்படுகிறது. மேலும், உ.வே.சா வீட்டை இடிக்கும் திமுக அரசு கால்டுவெல் நினைவு இல்லத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்குவதாக மதவாதக் கண்ணோட்டத்தில் பரப்பப்படுகிறது.