யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் போதே சமூக வலைத்தளத்திலும் ஊடகங்களிலும் கேட்கப்பட்ட கேள்வி குறித்து முதல்வர் பேசியதை திரித்து பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
யாருப்பா அந்த ஸ்க்ரிப்ட் ரைட்டரு? அவர் தான் துண்டு சீட்டுல எதைக் கொடுத்தாலும் அப்படியே படிப்பார்ன்னு தெரியும்ல்ல...
விரிவான விளக்கம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று புறப்பட்டார். 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 15,516 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு செப்டம்பர் 08ஆம் தேதி சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, ‘நீங்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கான பதில்’ என்று முன்னரே தயாரிக்கப்பட்ட பதிலை கூறியதாகவும், இது செய்தியாளர்களுக்கு கேள்விகளையும் ஸ்டாலினுக்கு பதிலையும் முன்னரே எழுதிக் கொடுத்து (scripted) நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு என்றும் சமூக வலைத்தளத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரால் பரப்பப்படுகிறது.
Did he really read "அடுத்த கேள்விக்கு பதில்" from the Script paper before press during the press meet ?😂😂
#VeryWrongStalinUncle pic.twitter.com/3kWCUxyQhC
இவரு தான் உங்க திராவிட சுடரா உபிகளே.. பேப்பர் ல எழுதி குடுத்ததுலயே எத😔எதை படிக்கணும் எதை படிக்க கூடாதுனு தெரியல.. 🤦🤦
உண்மை என்ன?
முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாட்டு பயணங்களை முடித்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி இணையத்தில் தேடியபோது, ‘சத்தியம் செய்தி தொலைக்காட்சி’ல் செப்டம்பர் 08ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி வீடியோவைக் காணமுடிந்தது.
அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எதற்காக இந்த வெளிநாட்டு பயணம்? இங்கிருக்கக்கூடிய நிறுவனங்களிடம் பேசினால் போதாதா? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால், ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பல முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு இவ்வளவு potential இருக்கு என்று நீங்கள் சொல்லிதான் இப்போது எங்களுக்கு தெரியும் என்று சொன்னார்கள். மேலும் ஒரு நாட்டிலுள்ள மாநிலத்தின் முதலமைச்சர் இன்னொரு நாட்டின் அரசு தலைவருடன் நேரடியாக சந்திக்கும் போது பிசினஸை தாண்டி உறவு வலுப்படும்’ என்று கூறினார்.
அடுத்ததாக, ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களிடம் இங்கேயே ஒப்பந்தங்கள் பேசாமல் ஏன் வெளிநாடு வரை செல்லவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் இந்த பயணம் பற்றி கேட்கப்பட்ட கேள்வியை குறிக்கும் வகையில் ‘இங்கே கேடகப்படுகிற அடுத்த கேள்விக்கான பதில்’ என்று கூறினார். பின்னர், ‘ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் இங்கேயே தங்களது திட்டங்களை விரிவுபடுத்தவும் புதிய திட்டங்களை தொடங்கவும் வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்களது புதிய திட்டங்களை இங்கேயே தொடங்குமாறும் விரிவுபடுத்துமாறும் அந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நான் கேட்டு கொண்டேன்’ என்று அதற்கு பதிலும் கூறுகிறார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசி முடித்த பிறகு தான் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவே தொடங்குகிறார்கள் என்பதை இந்த செய்தி வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது.
முடிவு:
முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் போதே சமூக வலைத்தளத்திலும் ஊடகங்களிலும் கேட்கப்பட்ட கேள்வி குறித்து அவர் பேசியதை திரித்து, கேள்வி கேட்கும் முன்பே முதல்வர் ‘அடுத்த கேள்விக்கான பதில்’ என்று பேசியதாக தவறாக பரப்புகிறார்கள்.