யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பரவிய செய்தி
கட்சியின் தலைவரோ, பொதுச் செயலாளரோ, பொருளாளரோ சென்றிருக்க வேண்டும். மூத்த அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டும். ஆனால் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதுதான் உங்கள் சமூக நீதியா ? முதல்வர் மு.க.ஸ்டாலின்?
விரிவான விளக்கம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.பொன்னுசாமி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், இறந்த கு.பொன்னுசாமி பழங்குடியினத்தை சேர்ந்தவர். அவரது இறப்புக்கு கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்ற உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுதான் திமுகவின் சமூக நீதியா ? என்று சவுக்கு சங்கர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
ஒரு பழங்குடியின திமுக MLA இறந்திருக்கிறார்.
கட்சியின் தலைவரோ, பொதுச் செயலாளரோ, பொருளாளரோ சென்றிருக்க வேண்டும். மூத்த அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டும். ஆனால் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
இதுதான் உங்கள் சமூக நீதியா ? @mkstalin https://t.co/DBHjoKRZA3
உண்மை என்ன?
சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி இறந்தது குறித்த செய்திகளை இணையத்தில் தேடியபோது, ‘தினமணி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.
அதில், ‘கடந்த அக்டோபர் 24ஆம் தேதியன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய செய்தி புகைப்படங்களுடன் துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அண்ணன் பொன்னுசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தது அறிந்து துயருற்றோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீதும் பேரன்பு கொண்டவர். நம் மீதும் தனிப்பட்ட… pic.twitter.com/ARg9yZyece
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இறந்த சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமிக்கு நேரில் சென்று துணை முதல்வர் அஞ்சலி செலுத்தியுள்ளது தெளிவாகிறது.
மேலும் அவரது உடலுக்கு நாடாளுமன்ற (ராஜ்ஜிய சபா) உறுப்பினர் ராஜேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட திமுகவினரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முடிவு:
சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த திமுகவின் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் செல்லவில்லை என்று சவுக்கு சங்கர் தவறாக தகவலை பரப்பி வருகிறார்.