யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் 100 யூனிட்டுகள் இலவசமாக தொடந்து வழங்கப்படும் என்றே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
பரவிய செய்தி
தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
விரிவான விளக்கம்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே 10 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில், 59 ஆண்டுகளுக்கு பின், திமுக., அதிமுக. அல்லாத புது கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது.
பதவியேற்ற பின், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உட்பட மூன்று முக்கிய கோப்புகளில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பின் படி “தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
500 யூனிட் வரை பயன்படுத்தினால் மட்டுமே இந்த சலுகை. கோடையில் AC போட்டால் 500 யூனிட்டை எளிதாக தாண்டிவிடும். அப்போது, பல காலமாக இருக்கும் முதல் 100 யூனிட் இலவசமும் ரத்து! முழு கட்டணமும் (₹8.40/யூனிட்) கட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள் 😂 pic.twitter.com/VX23BrimvW
வாக்கு போட்ட மக்களுக்கு
உண்மை என்ன?
தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, மூன்று முக்கிய அரசாணைகளில் அவர் கையொப்பமிட்டார். அதன்படி, '500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும்' என அறிவித்தார்.
இந்நிலையில் பரவி வரும் செய்திகளில் உள்ளவாறு, தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஆய்வு செய்தோம்.
#TANGEDCO #TNEB #TNPDCL #FIRSTSIGNATURE #UNITSFREE #தமிழ்நாடுமின்வாரியம் #TNDIPR pic.twitter.com/Wgo6vb5N49
அதன்படி, தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், "500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் 100 யூனிட்டுகள் இலவசமாக தொடந்து வழங்கப்படும்" என்றே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது என அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி, “தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்” எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.