யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம், தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்கு சொந்தமானது. தர்காவுக்கு ஒதுக்கப்பட்ட இந்தப் பகுதிகள் தவிர்த்து முழு திருப்பரங்குன்றம் மலையும் கோவிலுக்கே சொந்தமானது’ என்ற பழைய தீர்ப்பே தற்போது நடைமுறையில் உள்ளது.
பரவிய செய்தி
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்..!!
திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலையோ அல்லது சமணர் மலையோ இல்லை. அவ்வாறு அழைக்கப்படக்கூடாது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

விரிவான விளக்கம்
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் சுப்பிரமணிய சாமி கோவில், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயில், சமண குகைகள் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகியவை அமைந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுப்பது பற்றிய சர்ச்சை நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சையின் உச்சமாகக் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, மதுரை பழங்காநத்தத்தில் ’இந்து முன்னணி’ ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதும், அந்த ஆர்ப்பாட்டத்தில் மதங்களுக்கு இடையேயான மோதலை தூண்டும் வகையில் எச்.ராஜா பேசியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜீன் 22ஆம் தேதியன்று மதுரையில் ’இந்து முன்னணி’ சார்பில் முருக பத்தர்கள் மாநாடு நடத்துப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை பற்றி தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து கடந்த ஜீன் 24ஆம் தேதி தீர்ப்பளித்தது.
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்..!!
திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலையோ அல்லது சமணர் மலையோ இல்லை. அவ்வாறு அழைக்கப்படக்கூடாது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. pic.twitter.com/b3JguWIfPH
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ‘திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்’ என்று இந்து முன்னணி சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறது.
உண்மை என்ன?
கடந்த 24 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழங்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு குறித்து தேடினோம். ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. இந்த வழக்கின் அமர்வில் இடம்பெற்றிருந்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது.

நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில், ‘திருப்பரங்குன்றம் மலையை இந்து அமைப்புகள் ஸ்கந்த மலை என்றும், இஸ்லாமிய அமைப்புகள் சிக்கந்தர் மலை என்றும், சமணர்கள் சமணர் குன்று என்றும், உள்ளூர் மக்கள் திருப்பரங்குன்றம் மலை என்றும் அழைக்கின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பழமையானது. அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த மலையில் தர்கா மற்றும் சமணர் கோயில் உள்ளன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஏற்கெனவே முடிவு காணப்பட்டுள்ளது. அதில் தலையிட வேண்டியதில்லை’ என்றும் ‘ஆடு, கோழி பலியிடுவது என்பது தர்காவில் மட்டும் அல்ல, திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள இந்து கோயில்களிலும் உள்ளது. பலியிடுதல் மதப் பழக்கத்தில் ஒன்றாகும். இதை மாவட்ட ஆட்சியரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பழக்கம் தொடர திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அனைத்து தரப்பு மக்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில், ’திருப்பரங்குன்றம் மலை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றோ சமணர் குன்று என்றோ அழைக்கப்படக் கூடாது. தர்காவில் கந்தூரி விழா நடத்தி ஆடு, கோழிகளை பலியிடுவதற்கும், ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமிய புனித நாட்களில் தொழுகை செய்யும் உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டும். அதே நேரத்தில் சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், இந்த வழக்கின் விசாரணை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதவாது, இந்த வழங்கில் தீர்மானகரமான இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை.

இதனால், திருப்பரங்குன்றம் மலை குறித்து இதற்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பே தற்போது நடைமுறையில் இருப்பதாக கருதப்படும். 1931ஆம் ஆண்டில் லண்டனின் பிரிவி கவுன்சில் அளித்த தீர்ப்புதான் திருப்பரங்குன்றம் குறித்து வெளியான கடைசி தீர்ப்பாகும். அதில், ‘நெல்லித்தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி, அவற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்குச் சொந்தமானது என்பதும், தேவஸ்தானம் உரிமை கோரியவை அனைத்தும் (தர்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து திருப்பரங்குன்றம் மலையின் மற்ற பகுதிகள், கிரிவீதி, சன்னதி வீதி) கோவிலுக்கே சொந்தமானது’ என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ‘திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கே சொந்தம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டதைப் போல இந்து முன்னணி அமைப்பு சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறது.
முடிவு:
திருப்பரங்குன்றம் வழக்கு குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை திரித்து, ‘திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்’ என்று தவறாக பரப்பிவருகிறது இந்து முன்னணி அமைப்பு.