யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்து முன்னணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதற்காக தான் உங்களை கைது செய்கிறோம் என காவல்துறையினரே வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் தீபத்தூணில் டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காக்கு அருகில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி கொள்ளலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுக் கொடுத்தும், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதகலவரம் ஏற்படும் என்ற நோக்கில் அங்கு யாரையும் விடவில்லை. இதற்காக இந்து முன்னணியினரும், பாஜகவை சேர்ந்தவர்களும் தொடர் பிரச்னையிலும், ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் பாஜக மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் சாலையில் செல்பவர்களை இந்து மதத்தைச் சேர்ந்தவரா எனக் கேட்டுக் காவல் துறை கைது செய்வதாகக் காணொளி ஒன்று பரப்பப்படுகிறது.
இந்துவாக இருந்தாலே கைது.. | திராவிட காவல்துறையின் அட்டுழியம்.. | #TNPolice #இந்துவிரோததிமுக #CMStalin #TNGovt #HinduMunnani pic.twitter.com/wS0RRcvCJR
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்த போது, Poondi Murugan என்ற பேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் வீடியோ, உண்மையான லைவ் வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் இந்து முன்னணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதற்காக தான் உங்களை கைது செய்கிறோம் என காவல்துறையினரே வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளது பதிவாகியிருந்தது.
இதையடுத்து அந்த பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்த போது, செப்டம்பர் 3, 2024 அன்று பாரதிய ஜனதா கட்சியின்புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது என்று கூறி வெளியான பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. இதிலிருந்தது அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பது உறுதியானது.
அதே போல் டிசம்பர் 05, 2025 அன்று, நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அவர் பதிவிட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் டிசம்பர் 7 அன்று இந்து முன்னணி மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. இதற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்காத நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். இதில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக-வை சேர்ந்த 'பூண்டி முருகன்' என்பவரும் கைது செய்யப்பட்டார். இதனைத் திரித்து இந்துக்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்படுவதாக அவர் வதந்தியை பரப்பியது உறுதியானது.
முடிவு:
எனவே, இந்து முன்னணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதற்காக தான் உங்களை கைது செய்கிறோம் என காவல்துறையினரே வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் “நான் இந்து” மதத்தைச் சார்ந்தவன் என்பதால் சாலையில் சென்று கொண்டிருந்த என்னை காவல்துறையினர் கைது செய்தனர் என்று கூறி பாஜகவைச் சேர்ந்த பூண்டி ஞானவேல் முருகன் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.
