யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14 அன்று பயணம் செய்தது “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” அல்ல. “பிருந்தாவனம் விரைவு ரயில்”.
பரவிய செய்தி
வந்தே பாரத் என்பதால் ரயில்ல போறீங்க! இதே பழைய காங்கிரஸ் டைப் ரயிலா இருந்தா போவீங்களா ?! இதுதான் பாஜக. - பாஜகவின் அஸ்வதாமன்

விரிவான விளக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அரசுமுறை பயணமாக ரயிலில் பயணம் செய்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு பாஜகவைச் சேர்ந்த அஸ்வதாமன் உட்பட பலரும், “அவர் வந்தே பாரத் ரயில் என்பதால் தான் பயணம் செய்கிறார். பழைய ரயில் என்றால் பயணம் செய்திருக்க மாட்டார்” என்பது போன்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அவர் பயணம் செய்தது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அல்ல என்பதை அறிய முடிந்தது.
“News18 Tamil Nadu” யூடியூப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்தது குறித்து பிப்ரவரி 14, 2026 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயிலில் பயணம் மேற்கொண்டார்“ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து, “TheFederal“ ஊடகப் பக்கத்திலும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் பிருந்தாவனம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் என்று தெளிவாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை பொதிகை விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் என வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அல்லாத பிற ரயில்களில் பயணம் செய்துள்ளதையும் செய்திகளின் மூலம் உறுதி படுத்த முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 14 அன்று வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ததாகவும், வந்தே பாரத் அல்லாத பிற ரயில்களில் இது வரை பயணம் செய்யாதது போன்றும் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.