யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த செப்டம்பர் 05 அன்று ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைமுயற்சி சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பேக்கரி கடையில் தகராறு செய்த விசிக கட்சியினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் ஆயுதங்களால் தாக்குவதை தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது.
‘Mewat News express’ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் பரவி வரும் அதே வீடியோவைக் குறிப்பிட்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்று குறிப்பிட்டு கடந்த செப்டம்பர் 05 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதே போன்று, “Times of India“ ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் “புன்ஹானாவில் (நுஹ்) உள்ள தனது நகைக் கடையில் நகை வியாபாரி நவீன் சோனி திறந்த சிறிது நேரத்திலேயே, ஹெல்மெட் அணிந்தபடி இரண்டு பேர் அவரது கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியை (கட்டா) காட்டி அவரை மிரட்டி, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். கடைக்காரர் திருப்பித் தாக்கினார்.
சண்டையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கியின் பின்புறத்தால் நவீனின் தலையில் அடித்தார். நகைக்கடைக்காரர் ஒருவனைப் பிடிக்க முடிந்தது, மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் உ.பி.யின் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த அகமது (21) என போலீசார் அடையாளம் கண்டனர். சத்தம் கேட்டதும் கடைக்கு வந்த உள்ளூர்வாசிகள், குற்றவாளியை அடித்து, பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், கடந்த செப்டம்பர் 05 அன்று ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளைமுயற்சி சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் உள்ள பேக்கரி கடையில் விசிகவினர் கேக் கேட்டு தகராறு செய்வதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள பேக்கரி கடையில் விசிகவினர் கேக் கேட்டு தகராறு செய்வதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.